கண்களை பாதிக்கும் மோசமான பழக்கவழக்கங்கள் (Bad Habits for the eyes)
கண் தான் வாழ்க்கைக்கு ஒளி. தற்கால டிஜிட்டல் யுகத்தில் வளர்ந்து வரும் தொழிநுட்பங்களால் கண்கள் பாதிப்பு (Bad Habits for the eyes) அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
எமது உடலிலுள்ள ஒவ்வொரு அங்கங்களும் மிக முக்கியமானது.ஆனால் ,கண்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.
“கண் போல,கண்ணே,கண்மணியே என்று விளிப்பது எல்லாம் கண்ணின் முக்கியத்துவம் கருதியே.கண்ணை மிகவும் கவனத்துடன் பாதுகாக்க கொள்ள வேண்டும்.
போதியளவு நீர் குடிக்க தவறுதல் (Failure to drink enough water)
உடலின் சரியான செயற்பாட்டிற்கு போதுமான நீர் கிடைக்கவேண்டும். நீர் தேவையின் உணர்வு ஏற்பட்டும் நீர் பருகாது தள்ளிப்போடுவது ஆரோக்கியக்கேடு. இது உடலின் பல செயற்பாடுகளுக்கும், நம் பார்வைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். உங்கள் கண்ணின் சரியான செயற்பாடு மற்றும் கண்ணிற்கு தேவையான ஈரப்பதத்தைப் பெறுவதையும் இது தடுக்கிறது.
போதிய அளவு நீர் குடிக்காது விட்டால் கண்களில் வறட்சி, கண்களில் வலி ,பார்வைத்திறன் குறைவு போன்ற பார்வை கோளாறுகள் ஏற்படும்.
தூக்கமின்மை (Sleepless)
நல்ல ஆரோக்கியத்திற்கு தூக்கம் ஒரு முக்கிய காரணியாகும். சிலர் இரவில் தூங்காது அதிக நேரம் விழித்திருந்து கணணியில் வேலை பார்ப்பார்கள்.
இதனால் உடல் சூடாகி கண்கள் வறண்டு போகும். கண் அரிப்பு, தோல் உரிதல் , தோல் கறுத்துப்போதல்,கண் வீக்கம், பார்வை மங்கல் போன்றன ஏற்படலாம்.
மேலும் இது நிரந்தரத் தூக்கமின்மைக்கும் வழிவகுக்கும். தூக்ககுறைவு முகத்தில் பொலிவற்ற தன்மை, வீக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே, வயது வந்தவராக இருப்பின் இரவில் குறைந்தது 7 மணிநேர நல்ல தூக்கத்தைப் பெற முயற்சி செய்யுங்கள்.
டிஜிட்டல் திரையின் நீண்ட நேர பாவனை ( Screen time)
இப்போதெல்லாம் நமது வேலை, அன்றாட அலுவல்கள் ,விளையாட்டு ,பொழுதுபோக்கு என எல்லாவற்றிற்கும் கணினித் திரைகள் மற்றும் மொபைல் போன் திரைகளைப் பாவிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
இதனால் எம்மை அறியாமலே திரைகளைப் பார்த்துக்கொண்டு பல மணிநேரம் அவற்றிலேயே செலவிடுகிறோம். இது எமது கண்களுக்கு பல பாதிப்புகளைக் கொடுக்கின்றது.
கண்கள் வறண்டு போகும். இது மங்கலான பார்வை, தலைச்சுற்றல் மற்றும் தலைவலியை ஏற்படுத்தும்.
எனவே ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருதரம் ,கணினி அல்லது மொபைல் போன் திரைகளில் (Digital screen) இருந்து உங்கள் பார்வையை அகற்றுங்கள்.ஞாபகம் வைத்து இதை கட்டாயம் செய்ய பழகி கொள்ளுங்கள்.கண்களுக்கு அவ்வப்போது ஒய்வு கொடுங்கள்.
விரல்களால் கண்களை கசக்குதல்
கண்களில் லேசாக எரிச்சல் அல்லது அரிப்பு உணர்வு இருக்கும்போது, பெரும்பாலான மக்கள் வெறுமனே கண்களை விரல்களால் தேய்த்துக் கொள்கிறார்கள்.
இது மிகவும் மோசமான பழக்கம். இந்த பழக்கம் தேவையில்லாமல் கண் எரிச்சலையும் குறை குருட்டுத்தன்மையையும் ஏற்படுத்தும்.
மேலும், அழுக்கு விரல்களால் கண்களைத் தொடுவது கிருமிகள் கண்களுக்குள் நுழைய காரணமாக அமைகின்றது. எனவே கண்களில் அரிப்பு ஏற்பட்டால், குளிர்ந்த நீரில் நனைத்த ஒரு துணியை வைத்து மூடிய கண்களுக்கு மேல் சில நிமிடங்கள் மெதுவாக தேய்க்க முயற்சிக்கவும்.
அப்படி செய்தால் அந்த நமைச்சல் மறைந்துவிடும். ஏதாவது தூசு கண்ணிற்குள் போய்விட்டதைப் போல உணர்ந்தால், உங்கள் விரல்களால் தொடாமல் கண்களை நீரில் கழுவவும்.
ஒப்பனை தவறு (Wrong Makeup)
தரமற்ற கண் அலங்காரங்கள் மற்றும் காலாவதியான மேக்கப் தயாரிப்புகளின் பயன்பாடும் கண்களை சேதப்படுத்தும்.சில வகையான தோல் பராமரிப்பு பொருட்கள் கண்களுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை.
கண்ணுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் அவற்றில் இருப்பதால், அவை கண் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், கண்ணிற்கு போட்ட மேக்கப்புடன் அப்படியே உறங்க செல்வதும் கண்களுக்கு தீய விளைவை (Bad Habits for the eyes) ஏற்படுத்தும்.
இரவு தூக்கத்தின் போது, நம் கண்கள் இயற்கையான சுத்திகரிப்பு செயன்முறைக்கு உட்படுகின்றன.ஆனால் கண்களைச் சுற்றி ஒப்பனையுடன் நாம் இரவில் தூங்கினால், இந்த செயல்முறை தடுக்கப்பட்டு கண்ணில் பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படலாம்.
எனவே ஒப்பனையை அகற்றி, முகத்தை நன்றாக கழுவி விட்டு உறங்க செல்லுவது ,கண்களுக்கு நல்ல பயனைத் தரும்.
பாதுகாப்பு கண்ணாடி மற்றும் சன்கிளாஸ் (Sun glass)
சில இயந்திரங்கள் மற்றும் இரசாயனங்களுடன் பணிபுரியும் போது கண்ணாடிகளை அணிவது கட்டாய பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாகும்.
ஏனென்றால், சிறிதளவு தவறுகூட நம்மை நிரந்தர குருட்டுத்தன்மை அல்லது கடுமையான கண் பலவீனத்திற்கு இட்டுச் செல்லும்.
எனவே, இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு கண்ணாடிகளை அணிய வேண்டியது அவசியம்.
தீவிரமான சூரிய ஒளியில் வெளியே செல்ல வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படும் போது சூரியனின் கடுமையான கதிர்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள சன்கிளாசஸ் அணிவதும் நல்லது.
சன்கிளாசஸ் அணிவதற்கு வெட்கப்பட வேண்டாம். உங்கள் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றான கண் பாதுகாப்புக்கு சன்கிளாஸை அணியுங்கள்.
புகைபிடித்தல் (Smoking)
புகைபிடித்தல் இதய நோய், புற்றுநோய் மற்றும் சுவாச நோய்கள் போன்ற ஆபத்தான உடற்பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்.
ஆனால் புகைபிடிப்பது கண்களை சேதப்படுத்தும் என்பது பலருக்கு தெரியாது. புகைபொருட்களின் உற்பத்தியில் பயன்படுத்தும் நச்சு இரசாயனங்கள் கண்புரை போன்ற கடுமையான கண் நோய்களை ஏற்படுத்துகிறது.