சுரைக்காய் பாயாசம் (Bottle gourd Kheer)
சுரைக்காய் (Bottle gourd) அதிகப்படியான நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்து காணப்படும் ஒரு காயாகும். உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள ஒரு சிறந்த காய் இதுவாகும். சுரைக்காயின் பாகங்களான இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் குணம் கொண்டவையாகும்.
சுரைக்காயில் கூட்டு, பொரியல், குழம்பு,சுரைக்காய் ஜூஸ் என ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
நார்ச்சத்தானது செரிமானம் நன்கு நடைபெறவும் உடலானது ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச கொள்ளவும் அவசியமாகிறது.சுரைக்காயானது அதிக அளவு நார்ச்சத்தினை கொண்டுள்ளது.
சுரைக்காயினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு வர ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்கலாம்.
சுரைக்காயை வைத்து சுவையான இனிப்பான பாயாசம் செய்யும் முறையைப் பார்ப்போம். சுரைக்காய் பாயாசம் மிகவும் ஆரோக்கியமானது (Healthy recipe).
இதில் அதிக சக்தியினையும் விற்றமின்களையும் கொண்ட பேரீச்சம்பழம் சேர்க்கின்றோம். அதோடு நெய், பால்,பிஸ்தா,ஏலக்காய் என அனைத்து பொருட்களுமே சிறந்த ஆரோக்கியத்தை தரவல்லவை.
கொழுப்பு குறைந்த பாலை(Skimmed milk) சேர்க்கவும்.பேரீச்சம்பழத்தின் இயற்கையான இனிப்பே போதுமானதாக இருக்கும். விரும்பினால் சர்க்கரை சேர்க்கவும்.
தேவையான பொருட்கள் (Ingredients of Bottle gourd Kheer)
சுரைக்காய் – 1 கப் (துருவியது)
பேரீச்சம்பழம் – 8 இலிருந்து 10
நெய் – 1/2 டேபிள் ஸ்பூன்
பிஸ்தா- 1 டேபிள் ஸ்பூன்
பால் – 2 1/2 கப்
ஏலக்காய் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை (Bottle gourd Kheer recipe)
- சுரைக்காயை தோலுரித்து நைசாக துருவிக் கொள்ளவும்.
- பேரீச்சம்பழத்தை சுடுநீரில் ஊறவைத்து கூழாக அரைத்து கொள்ளவும்.
- அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நெய்யை ஊற்றி சூடுபடுத்தி, துருவிய சுரைக்காயை அதில் போட்டு நீர் வற்றும் வரை 3-5 நிமிடங்கள் வதக்கி கொள்ளவும்.
- அதில் பாலை ஊற்றி கொதிக்க விட வேண்டும். சுரைக்காய் அவிந்ததும் அதற்குள் பேரீச்சம்பழகூழ், ஏலக்காய் தூள் சேர்த்துக் கலக்கவும்.
- நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
- பிஸ்தாவை நீளமாக வெட்டி பாயாசத்தின் மேல் தூவி பரிமாறலாம்
இதனை சூடாக அல்லது ஆறியதும் குளிர்படுத்தி குளிராகவும் பரிமாறலாம்.
சுரைக்காயின் மருத்துவ பயன்கள் (Medicinal uses of Bottle gourd)
சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து விற்றமின் பி போன்றவை உள்ளன.
இதில் உள்ள அதிக நீர்ச்சத்து உடலி ல் உள்ள அதிகப்படியான வெப்பத்தை நீக்கி ,சருமத்தை பாதுகாக்க மிகவும் உதவுகிறது. சருமத்திற்கு பளபளப்புத் தன்மையை கொடுக்கிறது.
சிறுநீர் வெளியேறாமல் சிரமப்படுபவர்களுக்கு இது ஒரு சிறந்த நிவாரணியாகும்.
சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பழுத்த சுரைக்காயை ரசமாக்கி, அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறையும் சேர்த்து அருந்தினால் சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.
சுரைக்காயில் உள்ள நீர்ச்சத்து கண்களை குளிர்ச்சி படுத்தி,கண் எரிச்சல், கண் வலி போன்ற கண் சம்பந்தமான அனைத்து நோய்களில் இருந்தும் கண்களை பாதுகாக்கிறது.
சுரைக்காயை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் போன்றவைகள் விரைவில் குணமடையும்.
- வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.
- சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் விரைவில் குணமடையும்.
- சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து, உடலை வலுப்படுத்தும்.
- இரத்த சோகையைப் போக்கும், இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
- குடல் புண்ணை ஆற்றும்.
- சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும்.
சுரைக்காய் (Bottle gourd) பழச்சாறு மலச்சிக்கலை, வயிற்றுப் போக்கை தணிக்க உதவுகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. சுரைக்காய் பழச்சாறு உடலில் ஏற்படும் வலி மற்றும் அழற்சியை தணிக்கும்.
அறிவியல் ஆராய்ச்சியின் படி, இன்சோம்னியா (insomnia) மற்றும் வலிப்பு நோய்க்கான (epilepsy) சிகிச்சையில் சுரைக்காய் பழச்சாறு (Bottle gourd juice)சிறந்த மருந்தாக உள்ளது. சுரைக்காய் சாறு இதயநாள நோய் சிகிச்சைக்கும் பயன்படுகிறது.
உடல் பருமனாக இருப்பவர்கள் அதிகப்படியான எடையை மிக மிக சுலபமான முறையில் சுரைக்காய் பழச்சாறு குடிப்பதன் மூலம் குறைத்துவிட முடியும்.பயன்படுத்தி பலன் பெறுங்கள்!!