அநேக நோய்களுக்கு மூல காரணமாகும் மலச்சிக்கல் நீங்க (constipation)
மலச்சிக்கல் என்பது (constipation) பொதுவாக ,அனைவருக்கும் ஏற்படும் சாதாரணமான பிரச்சினை.ஆனால் இது பின்னாளில் ,பல்வேறு நோய்கள் வருவதற்குக் காரணமாக இருப்பதால் அதை ஆரம்பத்தில் சரி செய்ய வேண்டியது மிக அவசியமாகின்றது.
வாரத்துக்குக் குறைந்த பட்சம் மூன்று நாட்களாவது மலம் கழிக்கவில்லை அல்லது இறுகியவலியுடன் கூடிய மலம் கழித்தலை மட்டும்தான் ‘மலச்சிக்கல்’ என நவீன மருத்துவம் வரையறை செய்கிறது. ஆனால், பாரம்பரிய மருத்துவம் அனைத்துமே, தினமும் சிக்கலற்ற காலை நேர மலம் கழித்தலை மிக ஆணித்தரமாக கூறுகின்றன.
இந்த உணவுகள் எந்தப் பிரச்சனையும் இல்லாத ,காலைக்கடன் வெளியேற்றும் பழக்கத்தைச் சிதைப்பவை. நாள் ஒன்றுக்கு இரண்டு முறை மலம் கழிப்பது நல்லது என்கிறது சித்த மருத்துவம்(Siddha).
மூலநோய், மூட்டுவலி, தலைவலி முதல் எந்த ஒரு நரம்பு,தசை, சார்ந்த நோய்க்கும், முதலில் மலச்சிக்கலை நீக்குவதைத்தான் முதல் படியாக சித்த மருத்துவமும், தமிழர் வாழ்வியலும் செய்கின்றன.
மலச்சிக்கலினால் (constipation) அவதிப்படுபவர்கள் தங்கள் நடைமுறை வாழ்விலும், உணவுப் பழக்கங்களிலும் சில முக்கியமான மாறுதல்களைச் செய்து கொள்ளவேண்டும்.
மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவும் உணவுகள்
- நீர் மோர், இளநீர், பழச்சாறுகள், நீராகாராம் போன்றவற்றை பெருமளவில் பருக வேண்டும்.
- தினமும் அதிகளவு நீர் பருக வேண்டும். காலையில் எழுந்ததும் கட்டாயம் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்
- தினசரி உணவில், நீர்க்காய்களான வெண்பூசணி, வெள்ளை முள்ளங்கி, புடலங்காய், சிவப்பு முள்ளங்கி, சுரைக்காய் போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம். கீரைவகைகள், பச்சைக்காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகமாக உண்பதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- வாழைப்பழம் போன்ற பொட்டாசியம் நிறைந்த பழங்களையும், விட்டமின் ‘பி’ சத்து மிகுந்த முளைகட்டிய தானியங்களையும் உணவின் ஒரு பகுதியாக உட்கொள்ள வேண்டும்.
- இயன்றவரை காபி, டீ, கோலா போன்ற பானங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
மலச்சிக்கல் ஏற்பட காரணம்
தற்போதைய வாழ்வியல் முறையால் எல்லோருமே எப்பவும் அவசரமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால் வரும் போது அல்லது வசதிப்படும் போது போவோம் என மலத்தை அடக்கி கொள்வது.
பின்னாளில் இதுவே பழக்கமாகி, காலைக்கடன் பலருக்கும் மதியம், மாலை, இரவுக் கடனாக இஷ்டத்துக்கு மாறிவிட்டது. காலைக் கடனை காலையிலேயே தீர்த்துவிடுவதே சிறந்தது.
அதிகாலையில் மலம் கழிப்போருக்குத்தான், பகல் பொழுதில் பசி, ஜீரணம் சரியாக இருக்கும்; வாயுத்தொல்லை இருக்காது; அறிவு துலங்கும்.
அதிகமாக துரித உணவை உண்பது.இன்றைக்கு நன்கு விளம்பரப்படுத்தப்பட்டு, அழகாக பக்கட்டுகளில் அடைத்து விற்கப்படும் `ரெடி டு ஈட்’ (Ready to eat) உணவுகளில் பெரும்பாலானவை, நம் ஜீரணத்துக்குச் பங்கம் ஏற்படுத்துபவை.
ஆனால் நம் மூதாதையோர் சமையலில் கூட ,இவற்றை கவனித்து சாமர்த்தியமாக உணவின் மூலமே மலச்சிக்கல் ஏற்படாது பார்த்து கொண்டார்கள்.
பாரம்பரியப் புரிதலின்படி ,அன்றாடம் நீக்கப்படாத `அபான வாயு’ உடல், உள்ளம் இரண்டையும் நிறையவே சங்கடப்படுத்தும். எனவே, வாயுவையும் அடக்கக் கூடாது.
மலச்சிக்கலை நீக்க உதவும் முறைகள்
ஆரோக்கியமான உடலுக்கு வருடத்துக்கு இரண்டு முறை பேதி மருந்து எடுத்துக்கொள்வது நல்லது. குடும்ப மருத்துவரிடம் சென்று, நாடி பார்த்து, உடல் வலிமை பார்த்து, உடலுக்கு ஏற்ற பேதி மருந்தை எடுப்பதே நல்லது.
இரவில் படுக்கப்போவதற்கு முன்னர் இளஞ்சூடான நீர் இரண்டு டம்ளர் அருந்துவதும், காலை எழுந்ததும், பல் துலக்கி, இரண்டு டம்ளர் சாதாரண நீர் அருந்துவதும் நல்லது.
குழந்தைகளுக்கு 5-10 உலர் திராட்சைகளை (கிஸ்மிஸ், அங்கூர் திராட்சை) 2-3 மணி நேரம் ஊறவைத்து, அதை நீருடன் நன்கு பிசைந்து, மாலையில் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ( triphala ) ஆகிய மூன்று மூலிகைக்காய்களின் உலர்ந்த தூள்( திரிபலா) ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய மிக முக்கிய மருந்து.
உன்னதமான உணவு. இரவு படுக்க போகும் முன் ௧ தே.க திரிபலாவை வெந்நீரில் கலந்து குடித்து விட்டு படுத்தால், காலையில் மலம் தானாகவே சிரமமில்லாமல் வெளியேறும்.செய்து பாருங்கள்.
மலச்சிக்கலில் இருந்து விடுபட , முக்கியமாகத் சேர்க்கவேண்டியது நீர்சத்து நிறைந்த உணவுகளைத்தான்!