செரிமான மண்டல குறைபாடுகளை எப்படி சரி செய்யலாம் (Digestive tract)
பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாமல் பல்வேறு இயக்கங்களைச் செய்கின்ற நமது உடலின் ஒரு அற்புதமான பகுதி ஜீரண மண்டலம் (Digestive tract) ஆகும்.
ஏப்பம், வயிறு உப்புசம்
அதிகக்காற்றை விழுங்குதல், சாதாரணமாக விழுங்கும் காற்றை உடல் சரிவர வெளியேற்றாமல் இருப்பது, இரைப்பையில் ஜீரணமாகாத உணவு பெருங்குடலுக்குச் செல்லும் போது வாயு உற்பத்தியாவது, உடலில் இயற்கையாகவே சாதாரண அளவுக்கு உற்பத்தியாகும் வாயுவைக் கூட சிலரால் பொறுக்க முடியாது போவது போன்ற பல காரணங்களால் இவை ஏற்படும்.
சிலர் எந்தவிதக் காரணமும் இன்றி தாங்களாகவே ஏப்பம் விடுவதை ஒரு பழக்கமாகவே ஆக்கிக் கொள்ளுவர்.
சாப்பிடும்போது பேசுவது, அவசரமாகச் சாப்பிடுவது அல்லது திரவங்களைப் பருகுவது, ஸ்ட்ரா மூலம் உறிஞ்சிக் குடிப்பது, அடிக்கடி சூயிங்கம் மெல்வது, மிட்டாய் சப்புவது போன்றவை அதிகக் காற்றை விழுங்கச் செய்யும். பதட்டமாக இருக்கும் போது சிலர் அதிகக் காற்றை விழுங்குவர்.
சிலருடைய உடம்பு, நார்ச்சத்துள்ள மற்றும் குறிப்பிட்ட விதமான சர்க்கரை கொண்டுள்ள உணவு மற்றும் பருப்பு வகைகளை ஜீரணமாக்கும் போது, சாதாரணத்தை விட அதிக வாயுவை உற்பத்தி செய்கிறது.
உதாரணமாக, முள்ளங்கி, முட்டைக்கோஸ், ராஜ்மா, கிழங்கு வகைகள், பூண்டு. இந்தத் வாயுதொல்லை தொடர்ந்து இருந்தால் மருத்துவரிடம் காண்பிக்கவும்.
அஜீரணம்
சாப்பிட்ட பிறகு வயிற்றின் மேல் பகுதியிலோ, நெஞ்சின் கீழ் பகுதியிலோ, அசௌகரியமான அல்லது வலி போன்ற உணர்வு ஏற்படும். இதனுடன் நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி அல்லது உப்புசம் ஏற்படலாம்.
என்ன சாப்பிடும் போது இந்த அறிகுறிகள் ஏற்படுகிறது எனக் கவனித்துத் தவிர்க்கவும். தொடர்ந்து இருந்தால் மருத்துவரிடம் காண்பிக்கவும்.
குமட்டல், வாந்தி
இவை அசௌகரியத்தை ஏற்படுத்தி நம் அன்றாட வாழ்க்கையையே பாதிக்கும். ஜீரண மண்டலத்தையும் (Digestive tract) அதனைச் சுற்றியுள்ள உறுப்புகளிலும் மற்றும் உடலின் சில பாகங்களில் ஏற்படும் தொற்றினாலும், எரிவாலும், ஒற்றைத் தலைவலியாலும் குமட்டல், வாந்தி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு.
வாந்தியால் உடம்பில் தாது உப்பு, நீர் குறையும். உடனடியாக அதைச் சரிசெய்ய வேண்டும்.
ஜீரண மண்டலத்திலோ (Digestive tract), வயிற்றின் இதர உறுப்புகளிலோ வயிற்றின் சுவரிலோ தொற்று, எரிவு, அடைப்பு, புற்றுநோய், அடிபடுதல் என ஏற்பட்டால் வயிற்றுவலி ஏற்படும்.
நெஞ்சு/வயிறு எரிச்சல்
எப்பொழுதாவது காரமான உணவு சாப்பிட்ட பிறகு நம் எல்லோருக்கும் இது ஏற்பட்டிருக்கும். இதுவே அடிக்கடி ஏற்படுமானால் வயிறு உணவுக் குழாய் பின்னோட்ட நோயின் (Gastro Desophageal Reflux Disease) அறிகுறியாக இருக்கலாம்.
நாம் உண்ணும் உணவு எப்போதும் ஒரு வழிப் பாதையாக உணவுக் குழாயில் இருந்து இரைப்பைக்குச் செல்லும். அவ்வாறு இல்லாமல், சில சமயங்களில் இரைப்பையில் உள்ள உணவு அமிலத்துடன் உணவுக் குழாய்க்குத் திரும்பும் போது, உணவுக் குழாயைப் பாதிக்கிறது.
இதனால் நெஞ்சுக்குழியில் இருந்து நெஞ்சு மற்றும் தொண்டை வரை எரிச்சல், விழுங்குவதில் சிரமம் போன்றவை ஏற்படும். கவனிக்காவிட்டால், பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.
செரிமான மண்டலத்தை மேம்படுத்தும் வாழ்க்கைமுறை மாற்றங்கள்(Lifestyle changes that improve the digestive tract)
- சாப்பிட்ட பிறகு 2-3 மணி நேரம் கழித்து உறங்கச் செல்லவும். தலையை உயர்த்திப் படுப்பது உதவும்.
- சாக்லேட், தக்காளி மற்றும் புளிப்புப் பழங்கள், எண்ணெய், கொழுப்புச்சத்துள்ள உணவுகள் நெஞ்சு எரிச்சலை அதிகப்படுத்தும்.
- புகைப் பொருட்கள் உமிழ்நீர் சுரப்பதைத் தடுப்பதுடன், இரைப்பையில் அதிக அமிலம் சுரக்கச் செய்து, உணவுக் குழாய்க்கும், வயிற்றுக்குமான தசையைத் தளர்வடையச் செய்கின்றன.புகை, மதுப்பழக்கத்தைத் தவிர்க்கவும்.
- அதிக எடை இருந்தால், எடை குறைத்தல் நல்லது. வாரத்துக்கு இரண்டு தடவைக்கு மேல் நெஞ்சு எரிச்சல் இருந்தாலோ, உணவு நெஞ்சு அடைப்பது போல் உணர்ந்தாலோ , அடிக்கடி காற்றுக் குழாய்க்குச் சென்று இருமல், தொண்டை கரகரப்பு, மூச்சுத் திணறல் ஏற்படுத்துவது போன்றவை இருந்தால் மருத்துவரிடம் செல்லவும்.
வலி மாத்திரைகளை அதிக அளவில் உட்கொள்வது இரைப்பையில் சுரக்கப்படும் அமிலத்தில் இருந்து இரைப்பை மற்றும் டுயோடினத்தைக் காக்க முடியாமல் செய்து எரிவை ஏற்படுத்தி அல்சர் புண்ணாக்குகிறது.
செரிமானத்துக்கு உடற்பயிற்சி

வழக்கமான உடற்பயிற்சி உடலுக்கு நல்ல மருந்தாக உள்ளது. உடலின் பல செயல்பாடுகளை சீராக வைத்திருக்க இவை உதவுகிறது.
உடற்பயிற்சியில் குடல் இயக்கங்களை சீராக்க ஜாகிங் அல்லது சைக்கிள் ஓட்டுதல் பெருமளவு உதவும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு செரிமான பிரச்சனையோடு மலச்சிக்கல் இருந்தால் எளிய பயிற்சி செய்யலாம்.
தினமும் 30 நிமிடங்கள் நடைபயிற்சி அல்லது 10 நிமிடங்கள் உடற்பயிற்சியை வீட்டிலேயே செய்தால் போதும் செரிமான திறன் மேம்படும் என்று ஆராய்ச்சிகள் கண்டறீந்துள்ளது.