திரெளபதி ஐந்து கணவர்களைப் பெற்றது ஏன்?(Draupadi)
திரௌபதி (Draupadi) வனவாசத்தில் எவ்வளவு துன்பப் பட்டாலும், அஞ்ஞாத வாசத்தில் எவ்வளவு சிறுமைப் பட்டாலும் தன்னுள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த கோபத் தீயை அணையாமல் பார்த்துக் கொண்டும் அவள் பட்ட அவமானத்திற்கு கணவன்களை பொறுப்பேற்க வைத்து போரிட வைத்து வெற்றியும் கண்டாள்.
திரௌபதி (Draupadi) மகாபாரதம் எனும் காவியத்தில் திரெளபதி, யாக அக்னியில் பிறந்தவள் என்பதால் யாகசேனி என்றும் கரிய நிறத்தவர் என்பதால் கிருஷ்ணை என்றும் பாஞ்சால நாட்டு இளவரசி என்பதால் பாஞ்சாலி என்றும் அழைக்கப்பட்டார்.
திரெளபதிக்கு ஏன் ஐந்து கணவர்கள்?
பாண்டவர்கள் ஐவரும் பாஞ்சால தேசத்தில் நடைபெற இருந்த சுயம்வரத்திற்குச் சென்றனர். அப்போது தான் வியாசக முனிவர் ஒரு வரலாற்று உண்மையை விபரித்தார்.
முனிவர் ஒருவருக்கு அழகிய பெண் இருந்தாள், அவளுக்கோ திருமணம் நடைபெறக் காலதாமதம் ஆகிக் கொண்டே இருந்தது. அப்பெண்ணோ “தனக்கு திருமணம் விரைவில் நடைபெறவேண்டும்” என்று பரமசிவனைக் குறித்து கடுந்தவம் செய்தாள்.
பரமசிவனும் அவள் முன்பு தோன்றினார். “பெண்ணே!, நீ விரும்பிய வரத்தைக் கோள்” என்றாராம். அந்தப் பெண்ணும் மிகுந்த பயபக்தியுடன் எம் பெருமானே!, நற்குணங்களைக் கொண்டவரை நான் கணவனாகப் பெற வரமருளுங்கள்” என்று பணிந்தாள்.
பரமசிவன் பதிலேதும் கூறாமல் நின்றார். அப் பெண்மணியோ, தான் வேண்டிய வரத்தை திரும்பத் திரும்பக் கூறலானாள். இவ்வாறு அவள் ஐந்து தடவைகள் “நற்குணங்களைக் கொண்டவரை நான் கணவனாகப் பெற வரமருளுங்கள்” என்று வேண்டினாள்.
ஐந்தாம் முறையாக அப்பெண் கூறிய பின்பு பரமசிவன் குறுநகை புரிந்தார். “பெண்ணே!, நீ விரும்பிய வண்ணமே நற்குணங்கள் நிறைந்த ஐந்து கணவர்களைப் பெறுவாயாக” என்று வரமருளினார்.
“நான் ஒருவரைத்தான் மணக்க விரும்புகிறேன் ஆனால் நீங்கள் ஐவரை மணக்க வேண்டுமென அருளிச் செய்தீர்களே” என்று அப்பெண்மணி மெய் சிலிர்க்கக் கேட்டாள்.
“பெண்ணே…நீ ஐந்து முறை வரம் கேட்டாய் நானும் அருளிவிட்டேன், அடுத்த பிறவியில் நீ இந்த வரத்தின்படி கணவர்களைப் பெறுவாய்” என்று கூறி, பரமசிவன் மறைந்தார்.
பரமசிவனால் வரம்பெற்ற அப்பெண் தான் துருபதன் புத்திரியான திரெளபதையாவாள் என்று கூறிமுடித்தார் வியாசக முனிவர்.
ஐந்து கணவன்மாருடன் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டு ஒண்ணும் திரெளபதி அர்ச்சுனனுக்கு மாலையிடவில்லை.
என்றாலும் இதிலும் ஒரு அர்த்தமும், தாத்பரியமும் இருக்கிறது என்பதாலேயே இம்மாதிரியான ஒரு நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது.
ஐந்து கணவன்மாருடன் வாழ்ந்த திரெளபதி முறையே ஒருத்தருடன் ஒரு வருஷம் என்ற கணக்கில் வாழ்ந்தாள். ஒரு வருஷம் முடிந்ததும் “அக்னிப் பிரவேசம்” செய்து தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு தான் அடுத்த கணவனுடன் வாழ்ந்தாள்.
திரௌபதி – மகாபாரதம் (Draupadi & Mahabharaha)
மகாபாரதம், இந்தியா முழுக்க சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும் இதிகாசம். எழுதப்பட்டுக்கொண்டே இருக்கும் காவியம். நம் கதைகள் பலவும் மகாபாரதத்திலிருந்தே கிளைக்கின்றன.
மகாபாரதம் என்னும் காவியம் மர்மங்கள் நிறைந்தவை. இந்த காவியத்தில் காதல், மரியாதை, வீரம், புத்திசாலித்தனம், பக்தி மற்றும் ஒழுக்க பண்புகளை பறைசாற்றும் கதைகள் பல இருக்கின்றன.
இது ஒரு பக்கம் என்றால் வெறுப்பு, வஞ்சம், சூழ்ச்சி, ஒழுக்கமின்மை, கூடா ஒழுக்கம் மற்றும் அநீதியை பறைசாற்றம் கதைகளும் இருக்கவே செய்கிறது.
துரோணாச்சாரியாரைப் பழி தீர்க்க, தனக்கு ஆசி கிடைக்க வேண்டி, துருபத மன்னன் அக்னி யாகம் ஒன்றினை நடத்தினான்.
இந்த யாகத்தில் பிறந்தவள் தான் அழகிய, கருமை நிறத்திலான இளம் பெண்ணான திரௌபதி.
சுயம்வரத்தில் பாண்டவர்கள் ஐவரும் பங்கேற்றனர். சுயம்வரத்தில் தன் மகளை மணக்க துருபதன் ஒரு போட்டி வைத்திருந்தான்.
வில்வித்தையில் விற்பன்னனான அர்ஜுனன் மிக எளிதாகச் செய்துமுடித்து சுயம்வரத்தில் வென்றான்.
அர்ஜுனின் இந்த வெற்றிக்குப் பிறகு, தனது சகோதரர்களுடன் சேர்ந்து தம் தாயார் குந்தியிடம் திரௌபதியை (Draupadi) அழைத்துச் சென்றான்.
குந்திதேவி அந்தச் சமயம் சில வேலைகளில் மூழ்கியிருந்ததால், மைந்தர்கள் எதனைக் கொண்டு வந்தார்கள் என்பதை அறியாமல் வழமை போல , ’நீங்கள் என்ன கொண்டு வந்திருந்தாலும் ஐந்து பேரும் பகிருந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார்.
இதைக் கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அர்ஜுனன் தனது தாயின் முடிவை ஏற்க ஒப்புக் கொள்ளவே, திரௌபதி பாண்டவர்களை மணந்தாள்.
திரௌபதிக்கு ஐந்து மகன்கள் இருந்தார்கள். ஒவ்வொரு பாண்டவர் என்ற வீதத்தில் ஐந்து மகன்களை கொண்டிருந்தாள்.
அரச குமாரி, அவள் நினைத்திருந்தால் பிறந்த வீடு போய் அரச போகத்துடன் வாழ்ந்திருக்கலாம்.
ஆனால் புகுந்த வீட்டின் பெருமையையும் புகழையும் நிலை நிறுத்த அவள் அனைத்துத் துன்பங்களையும் அனுபவித்தாள். பேரழகும் பெருங்குணமும் ஓருங்கே பெற்ற மாதரசி அவள்!
சிவபெருமானைக் கண்டு முக்தியடைந்த திரௌபதியை பலர் குலதெய்வமாகப் போற்றி வணங்குகிறார்கள். பலருக்குக் காவல் தெய்வமாகவும் இருக்கிறாள்.