கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் கால்வீக்கம் (Foot swelling in pregnancy)
கர்ப்பகாலத்தில் கால் வீக்கம் (Foot swelling in pregnancy) என்பது இயல்பான விஷயம். கர்ப்ப காலத்தின் ஏழாவது மாதத்தில் கால் வீக்கம் ஏற்படுவது சாதாரணமானது.
சிலருக்கு லேசான வீக்கம் இருக்கும். ஒரு சிலருக்கு அதிகமான வீக்கம் இருக்கும். எப்படி இருந்தாலும் ஓய்வெடுத்த பிறகு வீக்கம் நீங்கி விட்டால் அது உடலுக்கு பிரச்னை இல்லாத வீக்கம் என எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், ஏழாவது மாதத்துக்கு முன்னரே காலில் வீக்கம் ஏற்பட்டால் , அல்லது ஓய்வெடுத்த பின்னரும் கால் வீக்கம் குறையவில்லை என்றாலும் உடனடியாக மருத்துவ உதவியைப் பெறுதல் அவசியம்.
கர்ப்ப காலத்தில் கால்கள் வீங்கினால்,அதற்கான காரணம் அறிந்து சிகிச்சை பெறவேண்டியது முக்கியம்.
கர்ப்பகாலத்தில் கால்வீக்கம் (Foot swelling in pregnancy) ஏற்பட காரணம்
கர்ப்பகால கால் வீக்கத்துக்கு முக்கியமான ஒரு காரணம் உயர் ரத்த அழுத்தம். கர்ப்பிணிகள் மாதம் ஒரு முறை தங்கள் ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, ரத்த அணுக்களில் மாற்றம் ஏற்பட்டு,அதன் காரணமாக புரதச்சத்து சிறுநீருடன் சேர்ந்து வெளியேறும்.
இப்படி கர்ப்பிணியின் உடலிலிருந்து அதிகமான புரதச்சத்து வெளியேறிவிட்டால், அது கர்ப்பிணியின் உடலையும் பாதிக்கும். அதோடு வளரும் குழந்தையையும் பாதிக்கும்.
இதனால் மேலும் ரத்த அழுத்தம் அதிகரித்து விடும்.
கர்ப்பத்தின் போது ஏழாவது மாதத்துக்குப் பிறகு குழந்தையின் முழுமையான வளர்ச்சி ஏற்படுவதால் , எடை கூடும். அப்போது கர்ப்பப்பை நன்கு விரிவடையும்.
இது அருகிலுள்ள ரத்தக் குழாய்களை அழுத்தும். இதனால், காலிலிருந்து இதயத்துக்குச் செல்லும் அசுத்த ரத்தம் முறையாக மேலே செல்ல முடியாமல் தடைபடும்.
இப்படி ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் போது, தோலுக்கு அடியில் நீர் கோர்த்துக் கொள்ளும். இதனால் காலில் வீக்கம் ஏற்படும். இந்த வீக்கமானது சிறிது நேரம் கால்களை நீட்டி உட்கார்ந்ததும் அல்லது இரவில் தூங்கி எழுந்ததும் நீங்கிவிடும். இது இயல்பான ஒன்று.
கர்ப்பிணிகளுக்கு ரத்தத்தில் உப்புச்சத்து அதிகமாகும் போது, கால்களில் வீக்கம் ஏற்படும். கால் பாதங்களில் ஆரம்பிக்கும் இந்த வீக்கம் கணுக்கால், கால், தொடை, பிறப்புறுப்பு, கைகள், வயிறு, முகம் என உடல் முழுவதிலும் வியாபித்து விடும்.
குழந்தையின் எடை மிகவும் அதிகமாக இருந்தால், கர்ப்பிணிக்குக் கால்கள் இரண்டும் வீங்கும்.இரட்டைக் குழந்தைகள், மூன்று குழந்தைகள் என ஒன்றுக்கு மேல் குழந்தை இருந்தாலும் கர்ப்பப்பை இயல்பான அளவைக் கடந்து விரிய வேண்டியது இருப்பதால், கர்ப்பிணியின் கால்கள் வீங்கும்.
பனிக்குட நீர் அதிகமானாலும் இம்மாதிரி கால்கள் வீங்கும்.
கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை ஏற்படுவது மிகவும் இயல்பு. இது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து கருச்சிதைவு, அடுத்தடுத்து குழந்தைகள் என ரத்தசோகைக்குப் பலரும் ஆளாகிறார்கள்.
லேசான ரத்த சோகை இருப்பவர்களுக்கு அவ்வளவாக கால் வீக்கம் ஏற்படாது. கடுமையான ரத்தசோகை இருப்பவர்களுக்குத்தான் கால்களில் வீக்கம் வரும். கர்ப்பிணிகளுக்கு உயர் ரத்த அழுத்தமும் ரத்த சோகையும் சேர்ந்திருந்து காலில் வீக்கம் ஏற்பட்டதென்றால் அது மோசமான நிலைமை. கவனமாக சிகிச்சை எடுக்க வேண்டும்.
சில கர்ப்பிணிகளுக்குப் புரதச்சத்து குறைவாக இருக்கும். சரியான விகிதத்தில் சத்துள்ள உணவுகளைச் சாப்பிடாவிட்டால் புரதம் மற்றும் இரும்பு உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் குறைந்து காலில் வீக்கம் ஏற்படும்.
இதயக் கோளாறு உள்ள கர்ப்பிணிகளுக்கு ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுவதால், காலுக்குக் கீழ் உள்ள ரத்தம் கால்களிலேயே தேங்கிவிடும். இதனால் காலில் வீக்கம் ஏற்படுகிறது.
ஏற்கனவே இருக்கும் இதயக் கோளாறு கர்ப்ப காலத்தில் இன்னும் அதிகமாகும்.
சிறுநீரககோளாறு உள்ளவர்களுக்குச் சாதாரணமாகவே கால்களில் வீக்கம் தோன்றும். கர்ப்பகாலத் தொடக்கத்திலேயே கால்களில் வீக்கம் ஏற்படத் தொடங்கி வீக்கம் இன்னும் அதிகமாகும்.
கர்ப்ப கால கால்வீக்கத்துக்கு சிகிச்சை
கர்ப்ப கால கால்வீக்கத்துக்குப் பல தரப்பட்ட காரணங்கள் இருப்பதால், ஒவ்வொருவருக்கும் காரணம் வேறுபடும். எனவே, காரணம் தெரிந்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம்.
பொதுவாக, கர்ப்பிணிகள் பகலில் சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும். இரவில் நன்றாகத் தூங்க வேண்டும். நின்றுகொண்டே பணி செய்கிறவர்களுக்கும், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கிறவர்களுக்கும் கால்களில் வீக்கம் ஏற்படுவதுண்டு.
இவர்கள் நீண்ட நேரம் தொடர்ந்து நின்று கொண்டிருப்பதைத் தவிர்த்து, சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொல்வதாலும் , கால்களை நீட்டி அமர்ந்து கொள்வதாலும் கால்களை உயர்த்தி வைத்துக் கொள்வதாலும் கால் வீக்கத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.
தரையில் அமரும்போது கால்களைக் குறுக்காக மடக்கி உட்கார வேண்டாம். இரவில் உறங்கும்போது, கால்களுக்குத் தலையணை வைத்துக் கொண்டாலும் கால் வீக்கம் குறையும். பகலில் பணிகளுக்கு இடையில் சிறிது நேரம் நடப்பது நல்லது.
கர்ப்ப கால உடற்பயிற்சிகளைச் செய்வதும் முக்கியம். முறையான யோகாவும் நீச்சல் பயிற்சியும் மிக நல்ல பயிற்சிகள்.
மருத்துவரின் ஆலோசனைப்படி உணவில் உப்பைக் குறைத்துக் கொள்வதும் பொட்டாசியம் அதிகமுள்ள வாழைப்பழம் போன்ற பழங்களைச் சாப்பிடுவதும் நல்லது.
அதிகம் காபி குடிப்பதை குறைத்து ஆரோக்கியம் தரும்,பால்,பழச்சாறுகளை அருந்தலாம். தேவையான அளவு தண்ணீர் அருந்துவது முக்கியம்.
இடுப்பில் இறுக்கமான ஆடைகள், காலணிகளை அணிவது கூடாது. ஹைஹீல்ஸ் செருப்புகளை அணியவே வேண்டாம்.
உடம்பில் பல்வேறு பகுதிகளில் திரவம் தேங்குவதால் ஏற்படும் ’எடீமா’ என்னும் வீக்கம் கால்கள் அல்லது பாதங்களை பாதிக்கும்.
சில நேரங்களில் தானாகவே மறைந்து விடும். அப்படி மறையாமல் நெடுநாட்கள் வீக்கம் நீடித்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.