கந்தனின் கவசம் ( Kandashasti Kavasam)
கந்தசஷ்டி கவசத்தின் ( Kandashasti Kavasam) பாடலிற்கான விளக்கத்தை உணர்ந்து படிப்போம். கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடியது என்று பொருள்படும்.
போரில் யுத்த வீரர்கள் தன் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது.
இது முருகனின் அருளைப் பெறுவதற்காக இயற்றப்பட்டது. கந்த சஷ்டி கவசத்தை இயற்றிய ஸ்ரீ தேவராய ஸ்வாமிகள் அதீத முருக பக்தர்.
இவர் ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார்.இந்த சஷ்டி கவசத்தை ( Kandashasti Kavasam) தினம் இரு வேளையிலும் அதாவது காலையிலும், மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான்.
ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பௌர்ணமிக்கு அடுத்து ஆறாம் நாள்.
ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு ஆகியவைகளைக் குறிக்கும்.செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான்.
அவருக்கு உகந்த நாள் சஷ்டி( Kandashasti Kavasam), சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர்.
நாம் அந்தத் திருவடியை விடாது படித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது.
வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும்.
கந்தன் வரும் அழகே அழகு.பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கைகீதம் பாட கிண்கிணியாட,மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்ரூ சொல்வது?
இந்திரன் மற்றும் எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறார்கள்.
என்னைக் காக்க வேண்டும், பன்னிரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக் காக்க வேண்டும்.
பார்வதி மைந்தனே முருகா….
உன் நெற்றியில் இருக்கும் திருநீற்றின் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந்தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்தின மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் முருகனை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.
வேல்கள் தான் எத்தனை?
உடம்பில் தான் எத்தனை பாகங்கள் காக்க என்று வேலை அழைக்கிறார்.வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்குப் புனிதவேல், கண்ணிற்குக் கதிர்வேல்,
நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல்,
கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனிய வேல் மார்பிற்கு ரத்தின வடிவேல். இளமுலை மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல்,
பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிற்றுக்கு வெற்றிவேல், சின்ன இடைக்கு செவ்வேல்,
நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர் வேல், ஐந்து விரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல்,
நாபிக்கமலம் நல்வேல், முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ரவேல், இரவில் அனைய வேல்
காக்க காக்க கனக வேல் காக்க!
அப்பப்பா எத்தனை விதமான வேல் நம்மைக் காக்கின்றன.
எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்கின்றது
பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்ல பூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அனைத்தும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்…..
அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பாவை, பொம்மை, தலைமுடி, மண்டைஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால் மந்திரம், இவைகள் எல்லாம் சஷ்டி கவசம் படித்தால் செயலிழந்து விடும் என்கிறார்…..
பின் மிருகங்களைப் பார்ப்போம், புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும் செய்யான், பூரான், இவைகளால் எற்படும் விஷம் சஷ்டி கவச ( Kandashasti Kavasam)ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார்……
நோய்களை எடுத்துக்கொண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் கந்த சஷ்டி கவசத்தைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார்.
மேலும் இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும், நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்…..
பின் சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள் என்றும் முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்றும் அப்பாடலில் கூறப்பட்டுள்ளது….
எனவே, நாள்தோறும் கந்த சஷ்டி கவசம் ( Kandashasti Kavasam) படிப்போம். வேலனைப் போற்றி வணங்குவோம்!! நாம் படும் பட்ட கஷ்டம் எல்லாம் விலகி ஓடட்டும்.
முதலும் முடிவும் முருகன் என்பதை எல்லோரும் உணர அவனே வழி செய்வான்!!