ஆஸ்த்மா போக்கும் மகராசனம் (Makarasana)
முதலை (மகரம்) ஓய்வாகப் படுத்திருப்பது போன்று இருப்பதால் இந்த ஆசனத்திற்கு இப்பெயர் போலும். மகராசனத்தின் (Makarasana) மூலம் கழுத்து, முதுகெலும்புகள், தசைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்ய முடியும். உடல் முழுவதுக்கும் நல்ல ஓய்வினைக் கொடுக்கிறது. மேலும் மன இறுக்கத்தை போக்கி புத்துணர்ச்சி அளிக்கிறது.
மகராசன நிலை(Crocodile pose) முதலையைப் போன்று இருந்தாலும், இவ்வாசனத்தில் உதரவிதான சுவாசத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
உதரவிதான சுவாசம் செய்யும் போது உதரவிதானம், வயிறு மற்றும் வயிற்று தசைகள் ஈடுபடுத்தப்படுகின்றன. இதன் காரணமாக ஒவ்வொரு முறை மூச்சை உள்ளிழுக்கும் போதும், உதரவிதானம் கீழ் நோக்கி இழுக்கப்படுவதால், நுரையீரல்களின் செயல்பாடு சிறக்கிறது.
மகராசனத்தில் மூலாதாரம், சுவாதிட்டானம் மற்றும் சகஸ்ரார சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இதன் காரணமாக ஆற்றல் அதிகரிக்கிறது.படைப்புத் திறன் அதிகரிக்கிறது. சகஸ்ரார சக்கரம் தூண்டப்படுவதால் தன்னை உணரும் தன்மை வளர்கிறது.
ஆஸ்துமா நோய்க்கு சிறந்த ஆசனம் மகராசனம்.மகராசனத்தில் ஏழு நிலைகள் உண்டு. ஆஸ்துமா போக்கும் ஆரம்பநிலையை வீடியோவில் காணலாம்.
இது மிகவும் இலகு. எல்லோராலும் செய்ய கூடியதே.முயன்று பாருங்கள்.
மகராசனம் (Makarasana) செய்யும் முறை
இவ்வாசனத்தில் பல நிலைகள் உள்ளன. இங்கு ஆரம்ப நிலை பற்றி பார்ப்போம்.
- முதலில் விரிப்பொன்றில் படுத்துக் கொள்ளவும்.
- கால்களைச் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
- கைகளை45 பாகை கோணத்தில் தரையில் நீட்டி வைத்துக் கொள்ளவும்.
- இரு கைகளிலும் சின்முத்திரை பிடிக்கவும். (பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் இணைத்து வைத்திருத்தல்)
- கால்கள் இணைந்திருக்கும் நிலையிலேயே தலையை வலது பக்கம் திருப்பவும்.அதேநேரம் உடலை இடது பக்கம் திருப்பவும்.
- இதேபோல் தலையை இடதுபக்கம் திருப்பி உடலை வலது பக்கம் திருப்பவும்.
- இவ்வாறு மாறி மாறி மூன்று முறை செய்யவும்.
- தலையைத் தூக்க கூடாது. தரையிலேயே இருக்க வேண்டும்.
மகராசனம் செய்வதன் மூலம்கிடைக்கும் பலன்கள் (Benefits of Makarasana)
1. வயிற்றில் இருக்கும் தசைகள் ஓய்வடைந்து ஜீரண சக்தி அதிகரிக்கிறது.
2. மலச்சிக்கல் வராமல் தடுக்கப்படுகின்றது.
3. மூச்சை இழுத்து விடும்போது, வயிறு மேலும் கீழும் அசைவதால் , முதுகுக்கும் இடுப்புக்கும் நல்ல ஓய்வு கிடைக்கிறது.
4. நுரையீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. இதனால் ஆஸ்த்மா, மூச்சிரைப்பு உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த ஆசனம்.
5. தூக்கமின்மையைப் போக்குகிறது.
6. இரத்தம்,சிறுநீரில் உள்ள சர்க்கரையளவு குறைகிறது.
7. இரத்த ஓட்டம், காற்று ஓட்டம், வெப்ப ஓட்டம், உயிர் ஓட்டம் சீராகிறது.
8.முதுகு வலியைப் போக்குகிறது.
9.தோற்றப்பாங்கை சரி செய்கிறது.
10.இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
11.மன அழுத்தத்தைப் போக்குகிறது.