100 வயசு வரை வாழ வைக்கும் இயற்கை உணவுகள்(Natural foods)
இயற்கை உணவுகள் (Natural foods) உண்மையில் அவை உணவு மட்டுமல்ல ,நோய்களையும் அண்டவிடாமல் காக்கும் மருந்துமாகும்.
அனைவருக்கும் நோய்கள் அணுகாமல், நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ ஆசை தான்.
ஆயினும் இக்காலத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் மற்றும் வாழ்க்கை முறைகள் எல்லாம் அதற்கு எதிராகவே இருக்கிறதே. என்ன செய்யலாம்?
உடலில் நோய்கள் தோன்ற அடிப்படைக் காரணம் நாம் தற்காலம் சாப்பிடும் உணவுகள் தான், உடலின் இயல்பு தன்மைகளுக்கு மாறான உணவுகளால், உடலில் உள்ள நீர் (கபம்), காற்று (வாதம்) மற்றும் சூடு 8பித்தம்) இவற்றின் அளவு இயல்பை விட கூடும் போதோ அல்லது குறையும் போதோ, நமக்கு நோய்கள் வருகின்றன.
இயற்கை உணவுகள் என்றால் என்ன ?
இரசாயனங்கள் சேர்க்காத, நெல்மணிகள் மூலம் தயாரித்த கைக்குத்தல் அரிசி, அவல், முளைகட்டிய தானியங்கள் மற்றும் காய்கறிகள் இவற்றையெல்லாம், அவற்றின் ஆற்றலை முழுமையாக உடலுக்கு கொண்டுசெல்ல, சமைக்காமல் அப்படியே சாப்பிடலாம்.
சமைக்கத் தேவையில்லாத உணவுகள் எல்லாம் இயற்கை உணவுகளே (Natural foods).
அவை நமக்கு நன்மை செய்ய உள்ளவையே.முதலில் நாம் சமையலில் உப்பு இல்லாமல், சாப்பிடும் வழிமுறைகளைக் காணலாம்.
என்னென்ன காய்கறிகள்? நெல்லிக்கனி, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணி, கரட் மற்றும் வெண்டைக்காய் போன்ற காய்கறிகளை, சமைக்காமலே சாப்பிட்டு அவற்றின் சத்துக்களை முழுமையாக அடையலாம்.
அருகம்புல்சாறு, வாழைத்தண்டுசாறு, துளசிச்சாறு, மணத்தக்காளி சாறு, அகத்தி இலை சாறு, முருங்கை கீரை சாறு, இவற்றை அவ்வப்போது குடித்துவர, அவை உடலின் தாதுநிலையை சீராக்கி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
காலையில் சாப்பிட வேண்டிய இயற்கை உணவுகள் (Natural foods to eat in the morning)
காலை வெறும் வயிற்றில் அதிக தண்ணீரைக் குடிக்க வேண்டும். பிறகு, நீராகாரம் அல்லது நெல்லிச்சாறு பருகவேண்டும். பிறகு தேவைப்பட்டால், அருகம்புல் சாறு அல்லது புதினா சாறு.
சிற்றுண்டி : காலை சிற்றுண்டியாக, கரட், முள்ளங்கி, பீட்ரூட் மற்றும் முளைகட்டிய தானியங்கள் கொண்ட காய்கறிகள் நிறைந்த உப்பு சேர்க்காத கலவை இல்லையென்றால், பப்பாளி, சப்போட்டா, மாம்பழம், ஆரஞ்சு, கொய்யா, வாழை, சீதாப்பழம் கொண்ட பழக் கலவை அல்லது பழங்கள் மட்டும் சாப்பிட்டு வரவேண்டும்.
காலை சமைத்த உணவைத் தவிர்க்க வேண்டும். பிறகு, டீ ப்ரேக்கில், சுக்கு காபி சர்க்கரை இல்லாமல் அல்லது கீரை சூப் பருகலாம்.
மதியம் : மதிய சாப்பாடாக, கைகுத்தல் அரிசி சாதம், இந்துப்பு சிறிது போட்டு, புளி சேர்க்காத, குறைந்த பருப்புகளும் அதிக காய்கறிகளும் கொண்ட காரமில்லாத சாம்பார், கீரைக்கூட்டு, காய்கறி பொரியல் செய்து சாப்பிடலாம்.
மாலை, டீ டயத்தில். சுக்கு காபி, அல்லது பழச்சாறு பருகலாம். இரவு உணவாக தேங்காய், கருப்பட்டி கலந்த உலர் பழங்கள் கொண்ட பழக் கலவை மட்டும் எடுத்துக் கொண்டால் நலம்.
அல்லது கோதுமையில் செய்த ரொட்டிகளை, எண்ணையில்லாமல் சுட்டு, காய்கறிக் கலவையில், தொட்டு சாப்பிடலாம்.
உணவுகளை தரையில் அமர்ந்து, வாழை இலையில் பரிமாறி, சுவைத்து நன்கு மென்று உண்ணவேண்டும். கட்டாயம் டிவி பார்த்துக்கொண்டோ, பேசிக்கொண்டோ, அல்லது கவலையிலோ சாப்பிடக்கூடாது.
இயற்கை உணவு சாப்பிடும் காலங்களில், அரிசி, பால், ஐஸ்கிரீம், சர்க்கரை மற்றும் உப்பு இவற்றை அவசியம் விலக்கவேண்டும்.
இன்று சுகபோக வாழ்க்கை வேண்டி கோடிக்கணக்கான ஆண்களும், பெண்களும் இந்த நெருக்கடிக்கு ஆளாகின்றனர்.
என்ன தான் பணி சார்ந்த அவசரம் என தவிர்க்க முடியாமல் போனாலும் எல்லா நேரங்களிலும் ஏன் இப்படி படபடப்பாகவும், நிம்மதியின்றியும், யோசித்து யோசித்து முடிகொட்டிப்போயும் இருக்க வேண்டும்? என்பது புரியவில்லை.
இயற்கையின் படைப்பான அழகிய வண்ணத்துப்பூச்சி ஒரு பூவிலிருந்து தேன் எடுப்பதற்காக எங்கெங்கோ சுற்றி அலைகிறது.
ஆனால் தேன் உள்ள பூவைக் கண்டு விட்டாலோ அதைச்சுற்றி வந்து தனது உணர்கொம்புகளால் தேனை உறிஞ்சி அப்படியே ருசித்து, லயித்து, கிறங்கிக் கிடக்கிறது.
ஒரு துளி தேன் என்றாலும், அதன் சுவையை ருசிக்கும் வண்ணத்துப் பூச்சியின் லயிப்பு நமக்கு ஏன் வருவதில்லை?.
ஏனேன்றால் அவை அடுத்த நொடியை பற்றி கவலைப்படுவதில்லை. நாம் தான் 1௦௦௦ வருசங்கள் வாழ்வது போல் நம் நிகழ்காலத்தை தொலைத்து கொண்டு இருக்கிறோம்.
தெரியாத எதிர்காலத்தை தேடி ஓடியே செத்துக் கொண்டிருக்கிறோம்.என்ன பயன்?
சிந்திப்போம்!