நவராத்திரி பூஜை வழிபாடு (Navarathri)
சர்வமும் சக்தி மயம். நவராத்திரி என்றால் ஒன்பது இரவு. ஒன்பது ராத்திரிகள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான விழா தான் இந்த நவராத்திரி (Navarathri) திருவிழா.
அம்பாள் மகிசாசூரனை வதம் செய்வதற்காக ஒன்பது நாட்கள் தவம் நோற்ற காலம் தான் நவராத்திரி. முப்பெரும் தேவியர்களான மலைமகள், அலைமகள், கலைமகள் இந்த மூன்று தேவியரும் ஒரு ரூபமாக வந்து மகிசாசூரனை வதம் செய்த பெருவிழா!
நவராத்திரியன்று, பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதன் மூலம் சொல்லப்படும் தாத்பரிகம் என்ன என்பதை தெரிந்து கொண்டால் நம் வாழ்க்கையின் இன்னல்கள் போக்க நமக்கு ஒரு விடை கிடைக்கும்.
நாம் நம்மிடம் இருக்கும் நல்ல விஷயங்களை எல்லாம் ஒன்று சேர்த்து, நம்மிடம் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிப்பதற்காக நம்மை பக்குவப்படுத்தக் கூடிய தவக்காலமாக இதை எடுத்துக் கொள்ளலாம்.
நவராத்திவிழாவில் ஏன் தானியங்கள் முக்கியத்துவம் பெறுகின்றது ?
புரட்டாதி மாதத்தில் வரும் நவராத்திரி திருவிழா மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.
கன்னி ராசியின் அதிபதியான புதன் பகவானின் மாதமாக இந்த புரட்டாசி மாதம் விளங்குவதாலும், இவர் சைவ கடவுளாகப் பார்க்கப்படுகின்றார்.
புரட்டாதி மாதத்தில் மழையால் ஏற்பட்ட குளிர்ச்சியால், பூமி இத்தனை நாட்களாக உட்கிரகித்திருந்த வெப்பத்தை வெளியிடும் காலம்.
இதனால் நம் உடலுக்கு உஷ்ணம் அதிகமாகும். இந்த காலத்தில் அசைவம் சாப்பிட்டால் மேலும் உஷ்ணம் அதிகரித்து வியாதிகளை ஏற்படுத்தும்.இதைக் கருத்தில் கொண்டே ,புரட்டாதி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என முன்னோர்கள் கூறுயுள்ளார்கள்.
நவராத்திரி விழாவின் போது, பிரசாதமாக வழங்கப்படும் தானியங்களால் ஆன பிரசாதம் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியம் கொடுத்து, உடலை வலுப்படுத்தவல்லது.
இதனால் நவராத்திரி விழாவை நாம் வெறும் ஆன்மிக ரீதியாகப் பார்க்காமல், அதை அறிவியல் ரீதியாகவும் பார்த்து அதன் பாரம்பரியத்தைக் காத்து, நம் தலைமுறையை பாரம்பரியத்தோடு வளர்ப்பது நம் கடமை.
நவராத்திரியில் (Navarathri) தேவியை வழிபடும் முறை
முதல், 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்யப்படுகிறது.
வீட்டை நன்கு சுத்தம் செய்த பின்னர் நாம் பயன்படுத்தும் அனைத்து உபகரணங்களுக்கும் விபூதி பட்டை போட்டு குங்குமம் ,சந்தனம் வைக்க வேண்டும்.
பின் வீட்டின் வாயிலில் மாவிலை, தோரணம் கட்டி சரஸ்வதி தேவியை வரவேற்க வேண்டும்.
பூஜை அறையை சுத்தம் செய்து பூஜை அறையில் உள்ள அனைத்து சுவாமி படங்களையும் அலங்காரம் செய்ய வேண்டும்.
நம் வாகனங்களை சரஸ்வதி தேவியை வழிபடுவதற்ககு முன் முழுமுதற் கடவுளான வினைகளை வேரறுக்கும் விநாயகரை வழிபட வேண்டும்.
பூஜை அறையில் முதலி ல் மஞ்சளில் விநாயகரை பிடித்து வைத்து குங்குமத்தில் பொட்டு வைத்து விநாயகருக்கு பூ, அருகம்புல் வைத்து வழிபட வேண்டும்.
விழாவை முன்னிட்டு கொலு வைக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக இடம்பெறும்.
பலவிதமான வடைகள் , அவல் உணவுகள் , பொங்கல், சுண்டல்,கேசரி,லட்டு,பாயாசம் என விதவிதமாக தானியங்களிலும் பருப்பு வகைகளிளும் பிரசாதங்கள் செய்து, படையலிட்டு, பாடல்கள் பாடி, மனதார அம்மனை வழிபடுவார்கள். பிரசாதங்களை அருகில் உள்ளவர்களுடன்பகிர்ந்து உண்பது வழக்கம்.
இந்த ஒன்பது தினங்களும் நவசக்தியை தினமும் ஒரு அம்பிகையின் அவதாரத்தை வழிபடுவது வழக்கமாக இருக்கின்றது.
நாம் வணங்கும் தெய்வங்களில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு சிறப்புகள் உண்டு. நமக்கு கல்வி செல்வத்தை அள்ளி தரும் கடவுளாக விளங்குபவள் சரஸ்வதி தேவி.
கல்வி செல்வத்தை அள்ளித் தரும் சரஸ்வதி பூஜை
மாணவ மாணவர்கள் சரஸ்வதியின் அருளை முழுமையாக பெறுவதற்கு புத்தகத்திற்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து, பூ வைத்து சரஸ்வதி தேவியின் மடியில் வைத்து கல்வி செல்வதை அள்ளி தருமாறு சரஸ்வதி தேவியை பணிந்து வணங்க வேண்டும்.
மாணிக்க வீணை ஏந்தும் சரஸ்வதி தேவிக்கு பிடித்தமான மலரான வெண் தாமரையை வைத்து வணங்குவது சிறப்பு வாய்ந்ததாகும்.
புத்தகங்களை வைக்கும் போது வீட்டில் இருக்கும் கத்தி,உழக்கு,மத்து,போன்றவற்றையும் வைத்து வழிபட வேண்டும்.
இசையைத் துறையில் இருப்பவர்கள் அவரவர் பயன்படுத்தும் இசைக் கருவிகளையும் வைத்து அவற்றிற்கு பொட்டு வைத்து சந்தனம் தெளித்து பூ போட்டு வழிபட வேண்டும்.
சரஸ்வதி பூஜை அன்று, அதாவது ஒன்பதாவது நாளன்று விசேடமாக வீடுகளிலும், தொழில் செய்யும் இடத்திலும் பூஜை செய்து வழிபாடு செய்வது வழக்கமாகும்.
கல்வி, தொழில் சம்பந்தமான அனைத்திற்கும் நாம் முதலில் சரஸ்வதி தேவியை வணங்கிய பின்பு தொடங்குவது சிறப்பு வாய்ந்ததாகும்.
குழந்தைகள் கல்வி கற்பதில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
ஆயுத பூஜை
வாழ்வில் நம் முன்னேற்றத்திற்கு உதவும் ஆயுதங்கள், இயந்திரங்கள், இதர உபகரணங்களையும் சிறப்பிக்க அவற்றை இறைவனடியில் வைத்து வழிபாடு செய்வதே ஆயுதபூஜை ஆகும்.
ஆயுத பூஜை அன்று சிறிய குடிசை தொழில் முதல் பெரிய அளவிலான தொழில் நிறுவனங்கள் வரை அனைத்து இடத்திலும் தாங்கள் உபயோகபடுத்தும் இயந்திரங்கள் மற்றும் தொழில் கருவிகளை சுத்தம் செய்து, பின் அவற்றிற்கு சந்தனப் பொட்டு, குங்கும பொட்டு வைத்து, பூ வைக்க வேண்டும். அவற்றை சரஸ்வதி தேவியின் படத்திற்கு முன் வைத்து விளக்கேற்ற வேண்டும்.
பின்னர் நெய்வேத்தியத்திற்காக செய்யப்பட அனைத்தையும் ஒரு வாழை இலையில் படைக்க வேண்டும். முக்கியமாக பொரி கடலை, அவல். வடை, பாயாசம், பழங்கள் போன்றவையும் படையலில் இடம் பெற வேண்டும்.
பூஜையில் கட்டாயம் வீட்டில் உள்ள அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். பூஜை செய்யும் போது வீட்டில் இருக்கும் பெண்கள், குழந்தைகள் சரஸ்வதி தேவியை போற்றி பாடல்கள், மந்திரம், போன்றவற்றை பாராயணம் செய்யலாம்.
பூஜை முடிந்து பின்பு , சரஸ்வதி தேவிக்கு நெய்வேத்தியமாக வைத்து படைத்தவற்றை அனைவருக்கும் பிரசாதமாக வழங்க வேண்டும்.
இவ்வாறு நவராத்திரியில் (Navarathri) சரஸ்வதி தேவியை வழிபட்டு, வாழ்வில் அழியாத நிலையான கல்விசெல்வத்தை பெற்று சரஸ்வதி தேவியின் முழு அருளை பெறுவோம்!