இளைத்தவனுக்கு எள் (Sesame seeds)
“இளைத்தவனுக்கு எள் (Sesame seeds), கொழுத்தவனுக்கு கொள்ளு ” என்று ஒரு பழமொழி உண்டு. எள்ளில் உள்ள எண்ணெய் சத்துக்கள் உடல் மெலிவாக இருப்பவர்களை பருமனாக்கும் தன்மையுடையது என்பதையே இந்த பழமொழி சுட்டிக் காட்டுகிறது.
நோய்வாய்ப் பட்டவராகிலும் சரி நோஞ்சானாகிலும் சரி அவர்களது உடல் பலப்படும்.
பிள்ளை எதைச் சாப்பிட்டாலும் உடல் மெலிந்து இருக்கிறது என்று கவலை கொள்ளும் தாய்மாருக்கு எள்ளு (Sesame seeds) நன்றாக கை கொடுக்கும்.
எள்ளில் அவர்களுக்கு பிடித்த உணவுகளான எள்ளுருண்டை, எள்கொழுக்கட்டை, எள்ளுசாதம் முதலியன அடிக்கடி செய்து கொடுங்கள். பிறகு பாருங்கள் உங்கள் பிள்ளையை!
எள்ளின் மருத்துவ குணங்கள் (Medicinal value of Sesame seeds)
குழந்தை பெற்ற பெண்கள் உணவுப்பொருட்களில் அதிக அளவில் எள் எண்ணெய் சேர்த்துக்கொண்டால் தளர்ந்த தசைகள் இறுகும். கருப்பைப் புண் குணமடையும்.
சிறுநீர் கழிவை கூட்டும். கட்டி வீக்கம் ஆகியவற்றை இளக்கும். மலச்சிக்கல் மற்றும் சீதபேதிக்கு பயன்தரும்.
மூவகை வர்ணங்களைக் கொண்ட எள் (Sesame seeds) வகைகள் உள்ளன. அவற்றில் கருப்பு நிறத்தைக் கொண்ட எள்ளில்தான் வெள்ளை மற்றும் செவ்வெள்ளை விட மருத்துவ குணங்கள் அதிகம் காணப்படுகின்றன. உணவாக அதன் எண்ணெய்யும் பயன்படுகிறது.

எள்ளை தூளாக்கி சூடான சாதத்துடன் சிறிது நல்லெண்ணை கலந்து சாப்பிட வயிற்றில் ஏற்படும் கொதிப்பு, குடல் வலி இவைகளைப் போக்கும். உடலுக்கு நல்ல தெம்பை தரக்கூடியது.
வாய்ப்புண்ணை ஆற்றுவதற்கு எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்து இடித்து வாயில் வெகுநேரம் வைத்திருந்து குதப்பித் துப்ப வேண்டும்.
மலம் சிக்கலில்லாமல் வெளியாகும். மூல வேதனை குறையும்.
பற்கள் எகிறுகள் தாடை இவைகளில் பலக்குறைவுள்ளவர் விதையை மென்று குதப்பிக் கொண்டிருப்பதாலும் நல்லெண்ணெய்யை வாயிலிட்டு குதப்பித் துப்புவதாலும் நன்மை பெறுகிறார்கள். மூளைக் களைப்புள்ளவர்கள் எள்ளை (Sesame seeds) அதிகமாக உணவில் சேர்ப்பது நல்லது.
சிறுநீரை சுண்டச் செய்வதால் அதிக அளவில் சிறுநீர் வெளியாகும். நீரிழிவு நோயிற்கு எள் கலந்த உணவு நன்மை தரும். பலத்தையும் தருகிறது. சிறுநீரில் சீழ் அதிக அளவில் வெயியாகும் நபர்களும் எள்ளை உணவில் அதிகமாகச் சேர்க்கலாம்.
பெண்களுக்கு பயன் தரும் எள் பொடியை உணவில் சேர்த்து உண்டால் மாதவிடாய் இன்மையையும், மாதவிடாய் வலியையும் போக்கும்.
வயது வந்தும் பூப்படையாத பெண்களும், மாதவிடாய் சரியாக ஆகாமல் கடும் வயிற்று வலியால் அவதியுறும் பெண்களுக்கும், தாய்ப்பால் குறைவாக உள்ளவர்களுக்கும் எள்ளுடன் கூடிய உணவால் நன்மை பெறுவர்.
உதிரச் சிக்கலை போக்க எள் ஊற வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும்.பனை வெல்லம் எள்ளு கருஞ்சீரகம் இம்மூன்றும் மாதவிடாய் காலத்திய வலி கடுப்பு உதிரச் சிக்கலை நீக்க பெறும் உதவி செய்கின்றன.
தமிழர்களின் சமையலில் எள்ளிற்கு முக்கிய பங்குண்டு. இதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் நல்லெண்ணெய்க்கு அதிக அளவில் மதிப்பு.
எள்ளின் எண்ணெய்யும் எள்ளைப் போல சிறந்தது. நல்லெண்ணெயை தேய்த்துக் குளிக்க வியர்வையை சரியாக வெளியேற்றி, தசைகளில் தேவையற்ற கழிவுப் பொருள்கள் தங்காமல் அவற்றை அகற்றுகின்றது.
தசைகளுக்கு பலத்தையும் தோலுக்கு மென்மையையும் மயிர்கால்களுக்குத் திடத்தையும் கேசங்களுக்கு கருமையையும் தருவதால் நல் எண்ணெய் குளியல் மிகவும் சிறப்பானது.
அடிக்கடி எள்ளை உட்கொள்வதினால் ஏற்படும் நன்மைகள்
ஒரு கப் பாலில் உள்ள கல்சியம் சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளது. பால் சாப்பிட முடியாதவர்கள் எள்ளு உருண்டை சாப்பிட்டாலே தேவையான கல்சியம் உடலுக்கு கிடைத்து விடும்.
நவதானியங்களில் ஒன்றான எள் தமிழர் உணவுப் பழக்கத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. எளிய உணவு தானியங்களில் ஒன்றான எள் நமது உடலுக்கு நன்மை தரும் பல சத்துக்களை கொண்டுள்ளது. எள் நாவுக்குச் சுவை தருவதோடு உடலுக்கு மருந்தும் ஆகிறது.
வளரும் குழந்தைகளின் ஆரோக்கியமும், மூளை வளர்ச்சியும் சீராக நடைபெற தரமான கல்சியச் சத்து போதுமான அளவு உடலுக்கு தேவை.
இந்த கல்சியம் எள்ளில் இருப்பதால் தினமும் இதனை உபயோகப்படுத்தும் போது ஆரோக்கியம் மேம்படும்.
எலும்புகள், பற்கள், நகங்கள் வலுவடைய இது உதவுகிறது.
குறிப்பாக எலும்புகளின் அடர்த்தியை அதிகப்படுத்தும் தன்மை எள்ளில் உள்ள கல்சியத்திற்கு உண்டு.
பெரியவர்களின் கால் மூட்டு தேய்மானம் கல்சிய சத்துக் குறைவால் ஏற்படுகிறது. இதற்கு எள் ஒரு சிறந்த உணவுப் பொருளாக உபயோகமாகிறது.
சுவாச மண்டல ஆரோக்கியத்தை பராமரிக்கிறது
எலும்பு அடர்த்தியை பராமரிக்கிறது
எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்கிறது.
கொழுப்பின் அளவை குறைக்கிறது
இரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது
இத்தகைய நன்மைகளைக் கொண்ட எள்ளை நாம் ஏதாவது ஒரு பக்குவத்தில் உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.