கை,கால்,உடல் நடுக்கம் ஏன்?(Tremors)
ஒருவரது விருப்பின்றி தாமாகவே உடலின் சில உறுப்புகள் நடுங்குவதை (Tremors) அவ்வாறு கூறலாம். பொதுவாக விரல்களில் ஏற்படும். வயதானவர்களிலும் நடுத்தர வயதினரிடையேயும் அதிகம் காணப்படும் என்றபோதிலும் எந்த வயதிலும் ஏற்பட வாய்ப்பு உண்டு.
சாதாரண நடுக்கம் என்பது (Shivering) பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம்.
அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு. மலேரியா சிறுநீர்த் தொற்று, செலுலைடிஸ் போன்றவை அதற்கு உதாரணங்களாகும்.
பயத்தினால் நடுங்குவது மற்றொன்று.ஆனால் இது வேறு.
நடுக்கம் என்றால் என்ன? (Tremors)
விரல்களும் கைகளும் நடுங்குவது. கோப்பை பிடித்தால் கிடுகிடுவென நடுங்கி தேநீர் தரையில் சிந்தும், சேவ் செய்யும்போது கை நடுங்கி கன்னத்தை ரணமாக்கிவிடும், சமையலறையில் பாட்டியின் கை நடுங்கி பாத்திரங்கள் பொத் பொத்தென விழுங்கி நொருங்கும்.
பொதுவாக வயதானவர்களில் கண்டிருப்பீர்கள். சில நோய்களாலும் வருவதுண்டு.
விரல்களில் மாத்திரமின்றி கைகள், தலை முகம் உதடுகள் குரல்வளை உடல் என எங்கும் ஏற்பட வாய்ப்புண்டு.
ஒருவர் தான் அதைச் செய்ய வேண்டும் என்று எண்ணாத போது அதாவது சுயவிருப்பின்றி அவரது முயற்சியும் இன்றி எதிர்பாராது ஏற்படுவதே இத்தகைய நடுக்கம் (Tremors)ஆகும்.
தசைகளின் அசைவியக்கத்தை கட்டுப்படுத்தும் மூளையும் நரம்பு மண்டலமும் தான் இதற்குக் காரணமாகும்.
பல வகைகள்
மூன்று முக்கிய வகைகள் உண்டு.
முதலாவது வகை ஒருவர் எதுவும் செய்யாது வாழாதிருக்கும்போது ஏற்படும் நடுக்கமாகும் இதை resting tremors என சொல்லுவார்கள். அத்தகைய நடுக்கம் அவர் ஏதாவது செய்ய முனையும்போது தற்காலிகமாகத் தணிவதுண்டு. சாதாரணமாக கை நடுக்கம் உள்ள ஒருவர் எழுத முனையும் போது அல்லது ஒரு பொருளைப் பற்ற முயலும்போது இத்தகைய நடுக்கம் தணியும்.
இந்நோயின் போது அவரது இயக்கம் மெதுவாவதுடன் நடையும் தளம்பலாக இருக்கும். சில ஈரல் நோய்கள், நடுமூளையில் பக்கவாதம் போன்றவை ஏனைய காரணங்களாகும்.
வேறு சில நடுக்கங்கள் ஒருவர் ஏதாவது செய்ய முனையும் போது மோசமாகும். இதை Intention tremors என்பார்கள். உதாரணமாக ஒரு பொருளைப் பற்ற முனையும் போது அல்லது எழுத முனையும்போது நடுக்கம் மோசமாகும்.
இன்னும் சில நடுக்கங்கள் எந்நேரமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். Action tremors என்பார்கள். இவற்றில் சில ஏதாவது ஒரு புறத்தில் மட்டும் இருப்பதுண்டு. உதாரணமாக இடது கை நடுங்கும் ஆனால் வலது பக்கத்தில் எதுவம் இருக்காது.
நடுக்கங்களுக்கான காரணங்கள் (Causes of tremors)
நடுக்கங்களில் பல, காரணம் சொல்ல முடியாதவை ஆகும்.காரணம் சொல்ல முடியாத நடுக்கங்களில் பல 65 வயதிற்கு பின்னரே ஆரம்பிக்கும்.
- இவற்றில் பல பரம்பரை பரம்பரையாக வருவதுண்டு. பரம்பரையில் தோன்றுபவை நடுத்தர வயதிலேயே வந்துவிடும்.
- பெற்றோரில் ஒருவருக்கு இருந்தாலே பிள்ளைகளுக்கு வர வாய்ப்புண்டு.ஆனால் எல்லாப் பிள்ளைகளுக்கும் வரும் என்றில்லை.
- கை நடுக்கம் மட்டுமின்றி தலை ஆடுவது குரல் நடுங்குவது போன்றவையும் பரம்பரையில் வரலாம்.
மருந்துகளின் பாவனை
ஏதாவது மருந்துகள் புதிதாக உபயோகிக்க ஆரம்பித்தாலும் நடுக்கங்கள் ஏற்படலாம்.
ஆஸ்த்மா நோய்க்கு உபயோகிக்கும் பல மருந்துகள் காரணமாகலாம்.
ஸ்ரோயிட் வகை மருந்துகள் (eg Prednisolone, betamethasone) லவகையாகும். இவை பல வகை நோய்களுக்கும் உபயோகிக்கப்படுவதுண்டு. இவையும் நடுக்கத்தை ஏற்படுத்தலாம்
மருத்துவ ஆலோசனை இன்றி தானாகவே மருந்தை வாங்கிக் குடிப்பதை தவிர்க்கவேண்டும்.
வலிப்புநோய்க்கு ,மனநோய்களுக்கு ,மனச்சோர்விற்கு உபயோகிக்கும் பல மருந்துகள், சில அன்ரிபயோடிக் மற்றும் அன்ரி வைரஜ் மருந்துகளும் நடுக்கத்தை ஏற்படுத்துவதுண்டு.
தைரொக்சின் மருந்தின் அளவு கூடினாலும் வரலாம். தைரொயிட் சுரப்பி அதிகமாக வேலை செய்யும் நோயிலும் நடுக்கம் வருதுண்டு.
இன்னும் பல மருந்துகளால் நடுக்கம் ஏற்படலாம் என்பதால் ஒருவர் தனக்கு புதிதாக நடுக்க நோய் ஏற்பட்டு மருத்துவரிடம் செல்ல நேர்ந்தால் தான் உபயோகிக்கும் அனைத்து மருந்துகளின் பட்டியலை மருத்துவரிடம் கொடுத்து ஆலோசனை பெறுவது அவசியமாகும்.
மது போதை
போதைப் பொருட்கள் நடுக்கத்தை ஏற்படுத்தலாம். முக்கியமாக மதுபானமும் புகைத்தலும் நடுக்கத்தை நடுக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும். அதேபோல போதையில் மூழ்கியவர் அதைத் திடீரென நிறுத்தினாலும் நடுக்கம் ஏற்படலாம்.
நிறுத்தும்போது ஏற்படும் நடுக்கம் தற்காலிகமானது சில நாட்களில் தணிந்துவிடும்.
போதைப் பொருள்கள் காரணமாயின் அவற்றை நிறுத்த வேண்டும்.
சிகிச்சை
நடுக்கம் ஏற்பட்டால் அதற்கான அடிப்படைக் காரணத்தை கண்டறிய வேண்டும். எனவே மருத்துவ ஆலாசனை பெறுவது அவசியம்.
பெரும்பாலான காரணங்களை விரிவாகவும் தெளிவாகவும் பேசுவதன் மூலம் கண்டறிய முடியும். இருந்தபோதும் இரத்தப் பரிசோதனைகள் மற்றும் CT scan, MRI போன்றவையும் தேவைப்படலாம்
மருந்துகள் காரணமாயின் அவற்றை இனங்கண்டு மருத்துவ ஆலோசனையுடன் வேறு மருந்துகளை உபயோகிக்க வேண்டும்.
நடுக்கம் உள்வர்கள் கோப்பி ,தேநீர் கொக்கோ போன்ற பானங்கள் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்
மனப்பதற்றமும் காரணம் என்பதால் அதைத் தணிக்க முயலவேண்டும்.
எவ்வாறாயினும் பெரும்பாலான நடுக்கங்கள் ஆபத்தற்றவை என்பதால் அச்சமடையத் தேவையில்லை.