அற்புதம் நிறைந்த அன்னை வேளாங்கண்ணி (Velankanni matha)
சுமையோடு வருபவர்களின் மனச்சுமையை தாங்குவதாலும், வேண்டிக் கொண்டவர்களின் உடல், உள்ளக் குறைகளைத் தீர்ப்பதாலும் மட்டுமல்லாமல், வேண்டுவோருக்கு வேண்டிய வரங்களைக் கருணையோடு தருவதாலேயே அனைவருக்கும் ஆரோக்கிய அன்னையாகத் திகழ்கிறார் வேளாங்கண்ணி மாதா (Velankanni matha).
இந்தியத் திருநாட்டில் அமைந்திருக்கும் வேளாங்கண்ணி (Velankanni matha) தூய ஆரோக்கிய அன்னைத் திருத்தலப் பேராலயம் நாகரீகப் பழமையும், ஆழ்ந்த ஆன்மீகமும் நிறைந்துள்ளது.
அன்னையின் ஆலயம் பண்பாட்டினாலும், மொழியினாலும், சமயத்தினாலும் வேறுபட்டிருக்கும் மக்களெல்லாம் சங்கமிக்கும் ஒரு புண்ணிய பூமியாகத் திகழ்ந்து வருகிறது.
அனைத்துலகுப் புகழ் பெற்ற இந்த மரியன்னையின் திருத்தலம் “கீழை நாடுகளின் லூர்து நகர்” என்று பெருமையோடு அழைக்கப்படுகிறது.
அவதியுறும் மக்களை அரவணைத்துத் தேற்றி வரும் அத்தாயின் பரிவையும் பாசத்தையும் அனுபவித்து மகிழ்ந்து நெகிழ்ந்து போகிறார்கள்.
மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் ஈடு இணையற்ற சான்றாக நின்று மிளிர்கிறது வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னைத் திருத்தலப் பேராலயம்.
அன்று எவருக்கும் தெரியாத சிற்றூராக வங்கக் கடலோரம் இருந்த வேளாங்கண்ணி, இன்று உலகப் புகழ் பெற்றத் திருத்தலமாக வளர்ந்து உயர்ந்து இருக்கின்றது.
ஆலயத்தின் மாட்சிமை மிக்க வளர்ச்சிக்குக் காரணமென்ன?(majestic development of the Velankanni temple)
பலருக்கும் தெரியாத இச்சிற்றூரை மாதாவே தேர்ந்தெடுத்துக் காட்சி தந்து, ஒப்பற்றத் திருத்தலமாக, அதுவும் உலகப் புகழ் பெற்ற மரியன்னையின் திருத்தலமாக மாற்றி இருக்கிறார் என்பதில் எள்ளவும் ஐயமில்லை.
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பனை மரச்சோலையில் அமைதியான சூழலிலே உள்ள வேளாங்கண்ணி என்னும் சிற்றூரில் தூய ஆரோக்கிய அன்னைத் திருத்தலப் பேராலயம் அமைந்து உள்ளது.
16ம் நூற்றாண்டில் நிகழ்ந்த மூன்று புதுமைகளினால் இந்த வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னையின் பக்தி பரவலாயிற்று.
பால் விற்ற இடையர் குல சிறுவனுக்கு அளித்த காட்சி
ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு முன் நாகப்பட்டினத்திலிருந்த ஒரு செல்வந்தருக்கு வேளாங்கண்ணியில் வாழ்ந்த ஒரு இடையர் குலச் சிறுவன் , ஒவ்வொரு நாளும் பால் கொண்டு போய் கொடுப்பது வழக்கம்.
ஒரு நாள் அதேபோல் பால் கொண்டு போகும் போது, கடுமையான வெப்பம் தாக்கவே, அந்தச் சிறுவன் சற்று இளைப்பாறும் விதமாக அங்கே இருந்த ஒரு ஆலமரத்தின் நிழலில், குளத்துக்கு அருகே சற்று ஒய்வு எடுத்தான்.
அப்போது சூரியனை விட அதிகம் பிரகாசமான ஒளி ஒன்று அவன் முகத்தில் பட்டது. உடனே அவன் கண் விழித்தான். அங்கே,
விண்ணக அழகு நிறைந்த அன்னை தெய்வீகத் திருக்குழந்தையை கையில் ஏந்தியவராய் திருக்காட்சித் தந்தார். அந்த அன்னை தாய்மைப் புன்னகை தவழ, தனது குழந்தைக்குக் கொஞ்சம் பால் தருமாறு அந்த சிறுவனைக் கேட்டார்.
விண்ணக அழகிலே மிதந்து வந்த அத்தாயின் வேண்டுதலை அந்தச் சிறுவனால் புறக்கணிக்க முடியவில்லை. அச்சிறுவனும் பால் கொடுக்க, அந்த குழந்தையும் பருகியது. சில வினாடிகளில் அந்தத் தேவ அன்னையும் அத்திருக்குழந்தையும் அந்த இடத்திலிருந்து மறைந்ததனர்.
செல்வந்தரின் வீட்டுக்கு வந்து, அந்தச் சிறுவன் தான் காலம் தாழ்த்தி வந்ததற்காகவும், பாலின் அளவு குறைந்து இருப்பதற்காகவும் செல்வந்தரிடம் மன்னிப்பு வேண்டினான்.
சிறுவன் இவ்வாறு சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, என்ன ஆச்சரியம்! பால் குடம் நிறைந்து வழிந்தோடியது. இதைக் கண்ட செல்வந்தர் சிறுவனிடம் நடந்ததை விளக்கமாய் கேட்டார்.
சிறுவனும் நடந்ததை சொல்லி முடித்தான். அப்போதும் பால் நிரம்பி வழிவது நிற்கவில்லை.
உடனே அந்தச் செல்வந்தர் சிறுவன் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து வந்தார். அன்னை காட்சி தந்த அந்த இடத்தில் இருந்த ஆலமரமும், அந்தக் குளமும் சற்று வித்தியாசமாகத் தான் தெரிந்தது அந்த செல்வந்தருக்கு.
உடனே அவர் அப்புனித தலத்தில் தாள்பணிந்து வணங்கினார்.
அன்று மாதா காட்சி கொடுத்த அந்தக் குளத்து நீர்தான் இன்று வேளாங்கண்ணி மாதா (Velankanni matha)குளத்துத் தீர்த்தமாகப் பக்தர்களால் பக்தியோடு பருகப்படுகிறது.
மருத்துவரால் கைவிடப்பட்ட பல நோய்கள், பிணிகள் தீர்க்கும் அரும் மருந்தாக வேளாங்கண்ணி மாதா தீர்த்தம் விளங்குகிறது.
அதுவே இன்று நம் முன் சாட்சியாய் நிமிர்ந்து நிற்கும் பழைய வேளாங்கண்ணி மாதா குளம்.
கால் ஊனமுற்ற மோர் விற்ற சிறுவனுக்கு அளித்த காட்சி
சில ஆண்டுகளுக்கு பிறகு வேளாங்கண்ணி அன்னையின் இரண்டாவது காட்சி வேளாங்கண்ணி (Velankanni matha) சிற்றுரிலேயே அமைந்துள்ள “நடுத்திட்டு” என்ற இடத்தில் நடைபெற்றது.
அங்கே கால் ஊனமுற்ற ஒரு சிறுவன், மோர் வியாபாரம் செய்து வந்தான். ஒரு நாள் மீண்டும் எழில் மிகுத் தோற்றத்துடன் வேளாங்கண்ணி அன்னை தனது குழந்தை இயேசுவுடன் காட்சி தந்து, தனது குழந்தைக்குச் சிறிதளவு மோர் தருமாறு கேட்டார்.
தாயின் பேரழகையும், குழந்தையின் தெய்வீகத் திருமுகத்தையும் கண்டு வியந்து மகிழ்ந்த சிறுவன், குழந்தைக்கு மகிழ்வுடன் மோர் வழங்கினான்.
அப்போது அந்தப் பேரழகுப் பெட்டகத் தாய், அந்தக் கால் ஊனமுற்றச் சிறுவனிடம் பின்வருமாறு சொன்னார்.
“மகனே உடனே நாகப்பட்டினம் சென்று அங்கே வாழும் கத்தோலிக்கக் கிறிஸ்தவர் ஒருவரிடம் நீ கண்ட இந்தக் காட்சியினைக் கூறி இந்த இடத்தில் மக்கள் ஒன்று சேர்ந்து கடவுளை வழிபட ஒரு ஆலயம் கட்டச் சொல்வாயாக” என்றார்.
ஆனால் அந்த சிறுவனோ தான் கால் ஊனமுற்றவன். என்னால் எப்படி அம்மா போக முடியும் என்ற ஏக்கப் பார்வையோடு வேளாங்கண்ணி அன்னையைப் பார்க்கிறான்.
அவனின் ஏக்கத்தைப் புரிந்து கொண்ட வேளாங்கண்ணி அன்னை “மகனே எழுந்து நட” என்ற வார்த்தைகளை உதிர்க்கிறார்.
அந்தச் சிறுவனின் ஊனமுற்ற கால்களிலே ஒரு புது இரத்தம் பாய்வது போல் தோன்றியது. அந்தச் சிறுவனும் உடனே எழுந்தான், நடந்தான், ஓடினான்.
அந்தச் சிறுவனின் ஓட்டம் நாகபட்டினத்தில் வாழ்ந்த கத்தோலிக்கக் கிறிஸ்தவர் வீடு வரைத் தொடர்ந்தது. வீட்டிற்குச் சென்று நடந்ததைச் சொன்னான்.
அவனின் வார்த்தைகளைக் கேட்டு ஆச்சரியம் அடைந்தார் அந்தக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்.
அதற்கு முந்தைய இரவில் அந்தக் கத்தோலிக்கக் கிறிஸ்தவரின் கனவில் தூய அன்னை தோன்றி ஆலயம் கட்டச் சொன்னதை நினைவு கூர்ந்தார்.
உடனே அந்தச் சிறுவனுடன் வேளாங்கண்ணி அன்னைக் கட்சிக் கொடுத்த அந்த இடத்திற்கு வந்தவுடன், தெய்வீகத் தாயின் குரலும் கேட்டது.
மகனே இந்த இடத்திலேயே ஆலயம் கட்ட வழி செய்வாயாக. இதைக் கேட்ட கத்தோலிக்கக் கிறிஸ்தவர் அந்த ஊர் மக்களின் உதவியுடன் அன்னைக்கு ஒரு ஆலயம் கட்டி முடித்தார்.
அதுவே இன்று நாம் காணும் வேளாங்கண்ணி அன்னை வீற்றிருக்கும் பேராலயம்.
புயலில் சிக்கிய மாலுமிகளின் கப்பலை பத்திரமாக கரை சேர்த்தது
கிபி 17ம் நூற்றாண்டிலே வேளாங்கண்ணி அன்னையின் (Velankanni matha) மூன்றாவது புதுமை நிகழ்ந்தது. அப்போது சீனாவில் உள்ள மாக்காவிலுருந்து போர்த்துக்கேய வியாபாரப் பாய்மரக் கப்பல் ஒன்று கொழும்பு நோக்கி பயணம் செய்து கொண்டு இருந்தது.
வழியில் கடுமையான புயலால் அந்தக் கப்பல் தாக்கப்பட்டது. அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகள் என்ன செய்வது என்றே தெரியாமல் பயந்து, அஞ்சி நடுங்கினார்கள்.
புயலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க கப்பல் மூழ்கும் நிலை நெருங்கியது. அந்த நிலையில் மாலுமிகள் அனைவரும் கன்னி மரியாவிடம் கரம் குவித்துக் கண்ணீரோடு செபித்தார்கள்.
நாங்கள் நலமுடன் கரை சேரும் இடத்தில், கன்னி மரியே உமக்கொரு ஆலயம் எழுப்புகிறோம் என நேர்ந்து கொண்டார்கள். சிறிது நேரத்தில், கொஞ்சம் கொஞ்சமாகப் புயலின் ஆக்ரோசம் குறையத் தொடங்கியது.
அவர்களின் புயலில் சிக்கியக் கப்பலும் ஓரிடத்தில் கரை சேர்ந்தது. அன்றைய தேதி செப்டம்பர் 8. அது கன்னி மரியாவின் பிறந்த நாள். கப்பல் கரை சேர்ந்த இடம் வேளாங்கண்ணிக் கடற்கரை.
மாலுமிகள் தாங்கள் நலமுடன் வந்து சேர்ந்ததற்காக இறைவனுக்கும் கன்னி மரியாவுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி செலுத்தி, நன்றி காணிக்கையாக அன்னைக்குச் சிற்றாலயம் ஒன்று எழுப்பினார்கள்.
போர்த்துக்கேய மாலுமிகள் எப்போதெல்லாம் வேளாங்கண்ணி கடற்கரை வழியாகச் செல்கிறார்களோ, அப்போதெல்லாம் மீண்டும் மீண்டும் வந்து அன்னையை வணங்கிச் செல்வது வழக்கம்.
அப்படி வரும் போது ஒருமுறை தாம் கட்டியச் சிற்றாலயத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, தாங்கள் கொண்டு வந்த பீங்கான் ஓடுகளை வேளாங்கண்ணி அன்னை ஆலயப் பீடத்தில் பதித்து, ஆலயத்தை அழகுபடுத்தினார்கள்.
அந்த பீங்கான் ஓடுகளில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்கை நிகழ்வுகள் அழகான முறையில் வண்ணம் தீட்டப்பட்டு உள்ளன.
அவை வேளாங்கண்ணி அன்னைத் திருத்தலப் பீடத்தை அலங்கரிக்கும் அழியா ஓவியங்களாக, இறவாக் காவியங்களாக வேளாங்கண்ணி அன்னைத் திருத்தலப் பீடத்தில் இன்றும் காணப்படுகிறது.
இவ்வாலயத்தின் மேற்கில் உள்ள விரிவாக்க முகப்பு, பிரான்சு நாட்டின் லூர்து நகரில் உள்ளப் பேராலயத்தின் வடிவில் கட்டப்பட்டது என்பது குறிக்கத்தக்கது.
வேளாங்கண்ணி புனித அன்னையின் திருவிழா(Festival of the Holy MotherVelankanni)
இவ்வாலயத்தின் திருவிழா, கன்னி மரியாவின் பிறந்த நாளும், போர்த்துக்கேய மாலுமிகள் கரை சேர்ந்த நாளுமான செப்டம்பர் 08 அன்று தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
வங்கக் கடலோரம், அமைதியான சூழலில் சுமையோடு வரும் பக்தர்களுக்கு காட்சி தருகிறார் அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா.
உலகப் புகழ் பெற்றுத் திகழும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், பாசலிக்க அந்தஸ்து பெற்ற பேராலயமாகவும், கீழை நாடுகளின் லூர்து எனவும் போற்றப்படுகிறது.
இதனால் எல்லாச் சமயங்களைச் சார்ந்த பக்தர்களும், அன்னை மரியாளை வழிபட்டு தன்னை செபத்தின் மூலமாக ஒப்புக்கொடுக்கிறார்கள்.
இங்கு, திருவிழா நாட்கள் என்று இல்லாமல் எப்போதும் பல வெளியூர், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள்.
திருவிழா காலங்களில் மட்டும் சுமார் 10 லட்சம் பக்தர்கள் இங்கு வந்து வழிப்பட்டு செல்கின்றார்கள்.இந்தத் திருவிழாவிற்கு , எல்லா மதங்களையும் சார்ந்த லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து, அன்னையின் அன்பைப் பருகிச் செல்வது மேலதிக சிறப்பு.
அன்னையிடம் வைக்கும் வேண்டுதல்கள்(Requests to Velankanni matha)
திருமண தடை, குடும்ப பிரச்சனை, நினைத்த காரியம் நிறைவேறத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பாத யாத்திரையாக லட்சக்கணக்கான பக்தர்கள் அன்னை வேளாங்கண்ணி மாதாத் திருவிழாவில் கலந்துகொள்ள வருவார்கள்.
அதேபோல், தனது வேண்டுதலுக்காகக் குறைந்தது மூன்று ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள் என்றும், மேலும் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் தொடர்ந்து பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய பின்னரும் ,வேண்டுதல் வைக்கும் போதும், வேளாங்கண்ணி புதுக்கோயிலின் பின் பக்கம் வாசலில் இருந்து, பழைய வேளாங்கண்ணி கோயில் மாதா குளம் வரை முழந்தாட்படியிட்டுச் சென்று தங்களது வேண்டுதல்களை அன்னையின் பாதத்தில் சமர்ப்பிக்கிறார்கள்.
முழந்தாட்படியிட்டுச் புதுக்கோயிலில் இருந்து பழைய கோயில் வரை பக்தியுடன் நடந்து சென்றால், வேண்டியது நிச்சயம் நடந்தேறும் என்பது பக்தர்களின் காலம் காலமான அசைக்க முடியாத நம்பிக்கை.
பாத யாத்திரையாக நடந்து வந்தாலும், முழந்தாட்படியிட்டுச் நடந்து வந்தாலும், தங்களது வேண்டுதல்கள் நிறைவேறும் பொருட்டும், வேளாங்கண்ணி பழைய கோயிலின் ஆலமரத்தில்.
திருமணம் கைகூட வேண்டும் என்று வேண்டிக் கொண்டவர்கள் தாலிக் கயிற்றையும், குழந்தை பாக்கியத்திற்காக வேண்டிக்கொண்டவர்கள் தொட்டிலை அந்த ஆலமரத்தில் கட்டி செல்கிறார்கள்.
தீராத நோய் மற்றும் உடல் நலம் பெற வேண்டியவர்கள் அந்த உடல் உறுப்பு பகுதிளை தகடுகளாக கட்டிவிட்டு செல்கிறார்கள்.
வேண்டுதல் நிறைவேறியதும், பின் மீண்டும் வந்து தங்களது பிரார்த்தனை மூலமாக நன்றியை பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.
வேளாங்கண்ணி அன்னையைத் (Velankanni matha) தேடி வரும் அனைவரும், பல அற்புதங்களை தமது வாழ்வில் பெறுகிறார்கள். உலகில் எங்கிருந்தாலும் வாழ்நாளில் ஒருதரமேனும் அன்னையை வந்து தரிசிப்போம்.
அன்னையின் கருணை மழையில் நாமும் நனைந்து, வாழ்வில் இன்னும் இன்புற்று இருப்போம்!!