வேலு நாச்சியாரின் வரலாறு (Velu Nachchiyaar)
எத்தனையோ வீர சாதனை படைத்த பெண்களை தமிழ் வரலாறு கொண்டிருக்கிறது.ஆனால் வீர மங்கை என்றால் வேலு நாச்ச்சியார் (Velu Nachchiyaar) ஒருவர் தான்.வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல.திறன்மிக்க ஆயுதங்களைக் கொண்டிருந்த மாபெரும் படைகளை எதிர் கொண்டு வீழ்த்திய வீரம்!
இராணி வேலு நாச்சியார் (Velu Nachchiyaar) என்ற பெயரைக் கேட்டாலே அவரின் வீரமும் ஆங்க்கேலேயரை எதிர்த்து நடத்திய போர்களும் தான் நினைவில் வரும். அதனால் தான் அவரை வீர மங்கை வேலு நாச்சியார் என்று அழைக்கின்றோம்.
வேலு நாச்சியாரின் (Velu Nachchiyaar) இளமை பருவம்
1730-ம் ஆண்டு சேதுபதி வம்சத்தில் ,இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர் சக்கந்தியில் வேலுநாச்சியார் பிறந்ததார். தந்தை இராமநாதபுர மன்னர் முத்து விஜய ரகுநாத செல்லமுத்து சேதுபதி.
தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார்.
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்ற பழமொழிக்கு உதாரணமாய் இருந்திருக்கிறார் வேலுநாச்சியார்.
வேலுநாச்சியாருக்கு தெரிந்தது வீரம் .தெரியாதது பயம் ஒன்றே.
சிறு வயது முதலே இவர் போர் பயிற்சிகளை பெற்று வந்தவர்.போர் கலைகளான வில், வேல், வாள், வளரி, குதிரையேற்றம் என எல்லா கலைகளையும் தேர்ச்சி பெற்று ஒரு வீர மங்கையாகவே வளர்ந்து வந்தார்.
திருமண வாழ்வு
1746- ல் சிவகங்கை இளைய மன்னர் முத்துவடுகநாதர் தேவர்கும் வேலு நாச்சியார்க்கும் திருமணம் நடைபெற்றது. இல்லறம், ராஜாங்கம், சிவகங்கை மக்கள் என மன நெகிழ்வுடன் ஆன்மீகமும் கலந்து வாழ்ந்து வந்தார்கள்.
பிரான்மலையில் உள்ள கோவிலில் இவரை பற்றிய பல குறிப்புக்கள் உள்ளன. இவர் இக்கோவிலுக்கு எப்பொழுதும் தன் கணவரோடு தான் வருவார்.
முத்துவடுகநாதர் மறைவு
முத்து வடுகநாத தேவர், இந்த பெயர் அந்த பகுதியில் மிகவும் பிரபலம், காரணம் இவரை எதிர்க்கும் திறன் எந்த எதிரிக்கும் இருக்காது. அந்த பகுதியில் வளரி என்னும் ஆயுதம் மிகவும் புகழ் பெற்றது. இந்த கலையில் கைதேர்ந்தவர்.
இந்த நேரத்தில் தான் பிரிட்டனின் கிழக்கு இந்தியா கம்பெனி, இந்தியாவில் அதிகாரம் கைப்பற்றி வரி வசூல் செய்து கொண்டு இருந்தது.
கிழக்கு இந்தியா கம்பெனி முத்துவடுகநாதர் தேவரிடம் வரி கட்ட கட்டளை பிறப்பித்த பொழுது அதை கட்ட மறுத்துவிட்டார். அது மட்டுமின்றி, கிழக்கு இந்தியா கம்பெனிக்கு எதிராகவும் களம் இறங்கினர்.
வளரி கலையை பற்றி நன்கு அறிந்திருந்த அந்த ஜெனரல், குறுக்கு வழியில் இவரை அழிக்க நினைத்தான்.
நேரம் பார்த்துக் கொண்டிருந்த நவாப்புக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. சிவகங்கையைத் தாக்க ஆங்கிலேயேப் படைகள் நவாப்புக்கு உதவ முன்வந்தன.
அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கி தன் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டான் நவாப்.
முத்து வடுகநாத தேவர் ஒரு சிறந்த சிவ பக்தர். இவர் சிவ ஆலயங்களுக்கு செல்லும் போது ஆயுதம் இன்றி தான் செல்வார்.
ஒரு முறை மன்னர் முத்து வடுகநாதர் காளையர் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த போது நவாப்பின் படைகள் காளையர் கோயிலைச் சுற்றி வளைத்தனர். கொடூரமாய் தாக்கினர்.
ஆங்கிலேயர் கொடுத்த போர் உபகரணங்களைக் கொண்டு தாக்கினர். வடுகநாதரும் அவரது படைகளும் வீரப்போர் புரிந்தனர். இருந்தும் அவர்களால் அந்தத் தாக்குதலைச் சமாளிக்க முடியவில்லை.
வடுகநாதர் வாளால் வெட்டப்பட்டு கொல்லப்பட்டார் .காளையர் கோயில் கோட்டை நவாப்படைகளின் வசமாகியது.
வீர மங்கை வேலு நாச்சியார் (Velu Nachchiyaar)
திடீர் தாக்குதலில் கோட்டை வீழ்ந்து மன்னர் இறந்துவிட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு எட்டியது. கதறி அழுதார்.
கணவரின் உடலைப் பார்க்க வேண்டும் என்று துடித்தார். தானிருந்த இடத்திலிருந்து காளையர் கோயிலுக்குச் செல்ல விரும்பினார்.
இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய படை ஒன்றை அனுப்பினான் நவாப். அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கியது.
ஆனால் நாச்சியார் ஆவேசத்துடன் போரிட்டார். எதிரிப்படைகளை சிதறி ஓடச் செய்தார்.
இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டுமென்பது தான் அவரது ஒரே இலக்காயிருந்தது. ஆனால் தளபதிகளாயிருந்த மருது சகோதரர்கள் அவருக்கு வேறு ஆலோசனை வழங்கினார்கள். ‘கோட்டை வீழ்ந்துவிட்டது. அரசர் இறந்துவிட்டார்.
நீங்களும் போய் சிக்கிவிட்டால் நம்மால் நவாப்பை பழிவாங்க முடியாது. நாட்டைக் கைப்பற்றவும் நாட்டின் பெருமையைக் காப்பாற்றவும் நீங்கள் வாழ்ந்தாக வேண்டும்.
அதனால் அங்கே போகக் கூடாது’ என்றார்கள். ஆனால் நாச்சியார் கேட்கவில்லை. கணவரின் உடலைக் காண காளையர் கோயில் சென்றார். இதற்குள் நவாப் கூட்டமும் ஆங்கிலேயப் படைகளும் சிவகங்கைக்குள் நுழைந்துவிட்டன.
வேலு நாச்சியார் ,காளையர் கோயிலில் கண்ட காட்சி கொடூரமானது.
எங்கெங்கும் பிணக் குவியல். கோயில் திடலின் நடுவே அரசரும் இளையராணியும் ரத்தம் வடிந்து கிடந்தார்கள். காணக் கூடாத காட்சி அது. கதறி அழுதார் நாச்சியார்.
1772 -ம் ஆண்டு முத்துவடுகநாத தேவர் காலமானார்.
தன் கணவர் தந்திரமாக கொலை செய்ய பட்டர் என்று அறிந்த வேலு நாச்சியார் அவர் உடல் மீது சபதம் எடுத்துக்கொண்டு, அவரே தன் கணவர் உடலை தூக்கி கொண்டு சென்று, எரியூட்டுகிறார்.
கணவருடன் உடன்கட்டை ஏறிவிடலாமா என்று கூட யோசித்தார். ஆனால் கணவனைக் கொன்ற கயவர்களைப் பழிவாங்காமல் சாவதா? அந்த வீரமங்கைக்கு அது இயலாத காரியம்.
வீர மங்கை நாச்சியார் அவர்கள் அன்றே பெண் அடிமைத்தனம் , மூடநம்பிக்கை இதையெல்லாம் உடைத்தெறிந்தவர். சிவகங்கை மண்ணை பிடிக்க வீர மங்கை வேலு நாச்சியார் அவர்களுக்கு 8 வருடங்கள் தேவை பட்டது.
இந்த 8 வருடங்கள் மருது சகோதரர்கள் சொன்ன அறிவுரையின்படி தலை மறைவாக வாழ்ந்து வந்தார்.
ஹைதர் அலி-யின் உதவி
நவாப்பையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலி உதவியை நாடுவது என்று தீர்மானித்தார். ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி. தான் ஒளிந்திருந்த காடுகளிலிருந்து ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார்.
அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லில் இருந்தார். கடிதங்களுடன் ஹைதர் அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள்.
வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள். ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தான். ‘வேலு நாச்சியார் வரவில்லையா?” என்று ஹைதர் அலி கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன். அது வேலு நாச்சியார்.
ஹைதர் அலியுடன் உருது மொழியில் வேலு நாச்சியார் சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சரியம். தன் வேதனைகளையும் இலட்சியத்தையும் ஹைதர் அலியிடம் விளக்கினார் வேலுநாச்சியார்.
அவரிடமிருந்த வீரத்தைக் கண்ட ஹைதர் அலி தன்னுடைய கோட்டையிலேயே தங்கிக் கொள்ள அனுமதி தந்தார்
மேலும், இராணி கேட்ட பன்னிரண்டு பீரங்கிகள், ஐநூறு தூப்பாக்கிகள், குதிரைகள் வீரர்கள், என படையை திப்பு சுல்தான் மூலமாக அனுப்பி வைத்தார்.
மருது சகோதரர்கள்
மருது சகோதரர்கள் முத்துவடுகநாதர் படையில் முக்கிய தளபதிகள். இதில் பெரிய மருது, மிகவும் கோபக்காரர்.அவர் , தன்னை நோக்கி வரும் வேங்கையை ஒரே அடியில் சாய்க்கும் அளவுக்கு பலசாலி.
சின்ன மருதுவிற்கு திட்டம் தீட்டுதல் கைவந்த கலை, அவர் ஒருவரை சமாதானம் பேச அழைக்கிறார் என்றால், எதிராளிக்கு கொலை நடுங்கும். அந்த அளவுக்கு திட்டமிடுதலில் புத்திசாலி.
இவர்கள் இருவரும் இணைந்தால் எதிரி நிலை என்ன என்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். இவர்கள் இருவரும் முத்துவடுகநாதருக்கு இரு கைகள்.
இப்பொழுது புரிந்து இருக்கும் ஏன் ஜெனரல் இவரை மறைமுகமாக நின்று கொலை செய்தான் என்று.
இந்த இருவர் தான் , வேலு நாச்சியார் அவர்கள் தலைமறைவாக இருக்க அறிவுரை சொன்னது, சொன்னது மட்டுமல்லாமல் அந்த சமயத்தில் அவருக்கு அரணாக இருந்து காத்தவர்களும் இவர்களே.
கோட்டை மீட்பு
வேலு நாச்சியார் தனக்கு வேண்டிய பணிப் பெண்களுடனும், வீரர்களுடனும், விருப்பாட்சி கோட்டை, திண்டுக்கல் கோட்டைகளில் பாதுகாப்பாகத் தங்கினார்.
அங்கிருந்து தனது போர்ப் படைகளைப் பெருக்கினார். வேலு நாச்சியாரின் லட்சியம் ஆங்கிலேயப் படையை அழிப்பது.நவாப்பை வீழ்த்துவதே.
சிவகங்கை சீமையில் தனது பரம்பரை சின்னமான அனுமன் கொடியை பறக்க விடுவது.அதற்கான நாளும் வந்தது.
ஹைதர் அலி தந்த நவீன ரக ஆயுதங்களுடன் நவாப்படைகளுடன் போர் செய்யக் கிளம்பினார். வேலு நாச்சியார். முதலில் காளையர் கோயிலைக் கைப்பற்றினார்.
சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும் நவாப்பின் படைகளும் ஆங்கிலப் படைகளும் பரவி நின்றன.
அவற்றைத் தோற்கடித்தால் தான் சிவகங்கையை மீட்க முடியும்.
வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு “சின்ன மருதை தளபதியாகவும்”, இன்னொரு படைக்கு “பெரிய மருதுவுடன்” இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார்.
சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது.
விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம்.வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும்.
வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது.
இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை.வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டை விட்டு ஓடினார்கள்.
தலைமறைவு காலம்
இராணி தலைமறைவாக இருந்த பொழுது பல கோட்டைகளில் இருந்தார்.
தேவகோட்டை அருகில் உள்ள சக்கரபதி கோட்டை, அரண்மனை சிறுவயல் கோட்டை, பாண்டியன் கோட்டை, அரியக்குறிச்சி கோட்டை, படமாத்தூர் கோட்டை, மானாமதுரை கோட்டை, என பல கோட்டைகளை போர் பயிற்சி செய்யும் இடமாக இருந்துள்ளது.
இந்த கோட்டைகள் எல்லாம் காடுகளுக்கு நடுவில் இருந்ததால், சிரமம் இல்லாமலும் இருந்தது.
முட்புதர்களே, அரணாக இருந்ததால் அந்நியர்கள் அத்தனை சீக்கிரம் உள்ளே நுழைய முடியாது. அந்த அளவிற்கு இடங்களை தேர்வு செய்து கோட்டைகள் கட்டப்பட்டது.
இந்த கோட்டைகள் எல்லாம், ஆயுத கிடங்கவும், பயிற்சி மேற்கொள்ளும் இடமாகவும் பயன்படுத்தி உள்ளனர்.
இது போன்ற இடங்களை தேர்வு செய்யவே தனி நிர்வாக திறமை வேண்டும், அந்த திறனும் இராணி வேலு நாட்சியாரிடம் இருந்தது.
வேலடி தம்மம், திருப்பா சேத்தி , சிங்கம்புணரி போன்ற இடங்களில் ஆயுதம் தயாரிக்கும் இடமாகவும் இருந்தது.
தற்பொழுது இந்த கோட்டைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்பது வேதனை தரும் விடயம்.
அரண்மனை சிறுவயல், சுற்றிலும் வயல் வெளி, உள்ளே, ஆயுதக்கிடங்கு வாள், வேல், வளரி, என எல்லா ஆயுதங்களும் இங்கே பதுக்க பட்டு இருக்க வேண்டும்.
வேலுநாச்சியார் கடைசியில் தலைமறைவாக இருந்த இடம் விருப்பாச்சி. அங்கு கோபால நாயக்கர் இடம் அடைக்கலம் அடைந்தார்.
கோபால நாயக்கர்
திண்டுக்கல் சீமையில் உள்ள இருபது பாளையங்களில் ஒன்று விருப்பாச்சி. அந்த பாளையத்தை ஆட்சி செய்தவர் தான் கோபால நாயக்கர். எல்லா சுதந்திர வீரர்களையும் கொன்ற ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிரானவர்.அதனால் அந்த வீரர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்.
இந்த காரணத்திற்காக இவரையும் தூக்கில் தொங்கவிட்டனர் ஆங்கிலயேர்கள்.
சிவங்ககை சீமை இராணி வேலு நாச்சியார் அவர்களே, சிவகங்கை மீட்பு போராட்டத்தின் போது அடைக்கலம் இருந்த இடம், விருப்பாட்சி கோபால நாயகர் இடம்.
அந்த அளவிற்கு நம்பிக்கைக்குரிய இடம் விருப்பாட்சி.
இது போல, பல நல்ல உள்ளங்களும், பெரிய மனிதர்களும் இராணி வேலு நாச்சியார் தலைமறைவாக இருந்த பொழுது உதவினார்கள்.காரணம் பயமோ அல்லது இராணி என்ற காரணத்திற்காகவோ இல்லை.
வேலு நாச்சியாரின் துணிச்சல், மக்கள் மேல் அவர் கொண்டிருந்த அதீத அன்பு இதற்காகவே.
வெட்டுடையாள் ஆலயம்
வேலு நாச்சியாருக்கு உதவிய ஒரு வீரப்பெண் உடையாள். இப்பொழுது பிரசித்தி பெற்ற வெட்டு உடையாள் காளியம்மன் கோவில், இவரின் அர்ப்பணிப்புக்காக , இராணிவேலு நாச்சியார் அமைத்த கோவில் தான்.
ஒரு முறை வேலு நாச்சியார் செல்லும் போது உடையாள் வீட்டு பக்கம் செல்கிறாள், அப்பொழுது தண்ணீர் கேட்கிறாள் வேலு நாச்சியார்.
வந்து இருப்பது இராணி என்று புரிந்து கொண்டு உதவுகிறாள். வேலு நாச்சியார் செல்லும் போது, என்னை கர்னல் பஞ்சோ தேடுகிறான், நான் செல்லும் திசையை சொல்லாதே என்று சொல்லிவிட்டு செல்கிறார்.
பின்னர் பஞ்சோவின் படை வந்து உடையாளிடம் விசாரிக்க, ஆமாம் இராணி வந்தார் என்று சொல்கிறாள்.
எந்த திசையில் சென்றால் என்று கேட்டதற்கு, அதை உங்களிடம் சொல்ல மாட்டேன் என்றாள்.
நீ சொல்லவில்லை என்றால் உன்னை துண்டு துண்டாக வெட்டி விடுவேன் என்று மிரட்டுகிறார்கள். உடையாள் சிவகங்கை சீமை பெண் அல்லவா, என்னை வெட்டினாலும் சொல்ல மாட்டேன் என்று சொன்னாள்.
அவளை துண்டு துண்டாக வெட்டி போட்டு விட்டு சென்று விட்டார்கள்.
உடையாள் வெட்டு பட்ட இடத்தில் ஒரு கோவிலை கட்டி வெட்டுடையாள் காளியம்மன் என்று பெயர் சூட்டினார் வேலு நாச்சியார். அங்கு ஒரு உண்டியல் வைத்து, அதில் தன் வைர தாலியை முதலில் சமர்ப்பிக்கிறாள்.
இக்கோவில் இன்றும் சிறப்பு வாய்ந்த கோவிலாக உள்ளது.
1772 ஆ ம் ஆண்டை வேலு நாச்சியார் அவர்களுக்கு மிகவும் கடுமையான ஆண்டு என்றே கூறலாம்.
கொல்லங்குடி, பனங்குடி, பாகனேரி, திருபுவனம், மல்லக்கோட்டை, மேலூர், லிங்கவடி, சிறுமலை, திண்டுக்கல், விருப்பாச்சி என்று அலைந்து திரிந்தார்.
இதற்கிடையில், 1773 இல் நவாப் சிவங்கங்கை யை உசைன் நகர் என்று பெயர் மாற்றி இருந்தார். மக்கள் அனைவரும் செய்வது அறியாமல் இராணி வேலு நாச்சியாரின் வருகையை எதிர்நோக்கி காத்து இருந்தனர்.
போர் அறிவிப்பு
பின் 1780 இல் போர் அறிவித்து ஹைதர் அலியுடன் சேர்ந்து வியூகம் அமைக்கிறார் இராணி வேலு நாச்சியார்.
காரணம் ஜெனரல் பெய்லி, மற்றும் கர்னெல் மான்ஜோ, இரண்டு கொடிய விலங்குகளை ஒன்று சேர விட்டால் சேதம் அதிகமாக இருக்கும் என்று இருவரும் எண்ணினர்.
அந்த நேரத்தில் ஹைதர் அலிக்கு யோசனை கூறுகிறார் இராணி, நான் சிவகங்கையை எடுத்துக்கொள்கிறேன், நீங்கள் மைசூர் 2-ம் போரை அறிவியுங்கள்.
அந்த நேரத்தில் ஹைதர் அலி, இராணி வேலு நாச்சியார் சொன்னதை ஏற்கிறார். காரணம் ,இராணி கர்னெல் மான்ஜோ வை அழிக்க நீண்ட நாள் எடுத்து கொள்வார், நாம் அதற்குள் பெய்லி ஐ அழித்துவிடலாம் என்று எண்ணினார். ஆனால் நடந்தது வேறு, மான்ஜோவை அழிக்க எடுத்து கொண்ட நாள் மிக குறைவு.
இராணி வேலு நாச்சியார் ஜெயிக்க அவருடைய வீரம் மட்டுமல்ல, விவேகம், அவரது படை அதிலும், தற்கொலை படை, கொரில்லா படை தான் சுலபமாக வெற்றியை பெற காரணம் என்று கூறுகிறது வரலாறு.
காரணம் 5000 பெண்களை வெளியேற்ற வேண்டும் என்று தவிப்பு.
போர் காலத்தில் மக்கள் பாதிப்பு அடைய கூடாது என்று எண்ணம் அவருக்கு மேலோங்கியது. 5000 மக்களை ஒரே நேரத்தில் வெளியேற்றினால் ஆங்கிலேயர்கள் மோப்பம் பிடிக்க வாய்ப்புள்ளது என்று எண்ணி, கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்ற வேண்டிய சூழ்நிலையில் இருந்தார்.
பஞ்சம் பிழைக்க செல்வது போல், உறவினர் வீட்டிற்கு செல்வது போல், நோய் வாய் பட்டுள்ளது போல் எல்லா மக்களையும் வெளியேற்றினார்.
குயிலி என்னும் வீரமங்கை
குயிலி என்னும் வீர பெண், இவர் தான் இராணியின் படையில் முதல் உயிர்பலி . இவரின் செயலை கண்டு போர் தந்திரம் தெரிந்தவர் கூட மிரண்டு தான் போய் இருந்தனர்.
வேலு நாச்சியாரின் வியூகம் முதலில், ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கை அழிக்க வேண்டும், அதற்கு துணை நின்றவர் இந்த குயிலி. இவரின் செயலை கண்டு மிரளத்தவர் யாரும் இருக்க முடியாது.
1780-ல் நவராத்திரி அன்று முதன் முதலில் ராஜா ராஜேஸ்வரி கோவிலில் நுழையும் போது, இந்த குயிலியைத் தவிர எல்லோரும் கோவிலுக்குள் சென்று விட்டனர்.
அங்கு விளக்கேற்ற வைத்து இருந்த எண்ணையை தன் மேல் ஊற்றி கொண்டே ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கு பக்கம் செல்கிறார் குயிலி.
கடைசியில் நெருப்பை பற்ற வைத்து வெற்றி வேல், வீர வேல் என்று சொல்லும் போது ஆங்கில படை உட்பட உலகமே திகைத்தது.
வீர மங்கை வேலு நாச்சியாரின் வரலாறு இருக்கும் வரையில், வீர தாய் குயிலியின் வரலாறும் நிலைத்து நிற்கும்.
அரியணை ஏறுதல்
சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது.
அவரது சபதம் நிறைவேறியது. வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது.
தனது அறுபத்தாறாவது வயதில் இறந்தார், வேலு நாச்சியார். அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது.
1790-ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியாகி சிகிச்சைக்காக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றார். 1793-ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது.
அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் 25 டிசம்பர் 1796 அன்று இறந்தார்.