உடல் எடை அதிகரிக்க செய்யும் உணவுகள் (Weight gain)
உடல் மெலிந்திருப்போர் உடல் எடையை அதிகரிக்க வேண்டியதும் (Weight gain) அவசியமானது. ஏனெனில் உடல் எடை அதிகமாகி உடல்பருமனாவது போலவே எடை குறைந்து, உடல் மெலிந்திருப்பதும் ஆரோக்கிய பிரச்சனையே.
உடல் எடையைத் தேற்றுவது (Weight gain) என்பது குழந்தைப் பருவம் முதலே இருக்கவேண்டிய அக்கறை. சிறு குழந்தையின் உடல் எடை அதிகரிக்கவில்லை என்றால், `இளங்காசம்’ எனும் பிரைமரி காம்ப்ளெக்ஸ்(Primary complex) காரணமாக இருக்கக்கூடும்.
சிறு குழந்தையாக இருக்கும் போதே இதைச் சரியாக கவனிக்கத் தவறும் போது பின்னாளில் எப்போதும் மெலிந்த தேகம் நிலை பெற்றுவிடலாம்.
`எனக்குள் என்ன நடக்கிறது?’ என்ற அறிவும் அக்கறையும் ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய அடிப்படையான விஷயம்.
என்ன தான் கண்டதையும் சாப்பிட்டாலும் உடல் தேற மாட்டேங்குது என அங்கலாய்க்கிறவர்களுக்கு உடல் எடை அதிகரிக்க சில உணவுகளையும் வழிமுறைகளையும் பார்ப்போம்.
‘கஞ்சி அன்னத்திற்கு காயம் பருத்திடும்’ என்கிறது சித்த மருத்துவம். காலை வேளையில் சிறு குழந்தையாக இருந்தால் சத்து மாவுக் கஞ்சியும், இளைஞர்களாக இருந்தால் அரிசி தேங்காய்ப்பாலும் சாப்பிடுவது உடல் எடை ஏற ஒத்தாசை செய்யும்.
கஞ்சி என்பதற்கு காய்ச்சி அருந்துவது என்று பொருள். உடைத்த புழுங்கல் அரிசி, அதில் கால் பங்கு பாசிப் பயறு எடுத்து, வறுத்து திரித்து வைத்துக்கொண்டு நீர்விட்டுக் காய்ச்சி, அதில் சூடான பால், சர்க்கரை, சிறிது பசு நெய் சேர்த்துக் குழந்தைக்கு வாரத்துக்கு இரண்டு, மூன்று தடவை கொடுக்கலாம்.
உடல் எடை அதிகரிக்கும் உணவுகள் (Foods to Weight gain)
`இளைத்தவனுக்கு எள்ளு’ என்பது முதுமொழி மட்டுமல்ல, மருத்துவ மொழியும் கூட. இளைத்த உடல் உடையவர்கள், இட்லி, தோசைக்கு எள்ளுப்பொடி,எள்ளுசாதம், எள்ளுச்சட்னி, நொறுக்குத்தீனியாக எள்ளுருண்டை என எள்ளை அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம்.
பெண் குழந்தைகளுக்கு உளுந்து சேர்த்த உணவுகள் மிக நல்லது. இளம் பெண்களில், மிகவும் மெலிந்த உடலோடு இருக்கும் பெண்கள், சற்று வாளிப்பான உடல்வாகு பெறுவதற்கு எள்ளும் உளுந்தும் மிகவும் பயன்தரும்.
வயிற்றில் அல்சர் எனும் வயிற்றுப்புண், குடல்புண் இருந்தாலும் சிலருக்கு உடல் எடை ஏறாது.
இப்படியான நோய்களுக்கு ஆளானவர்கள், தினசரி காலையில் நீராகாரம் (உடைத்த புழுங்கல் அரிசி கஞ்சியில் வெந்தயம், சீரகம் சேர்த்துச் செய்து வடித்தது), மதியம் மோர், மாலையில் வாழைப்பழம் சாப்பிட்டு வரலாம். இந்த உணவுப்பழக்கம், குடல்புண்ணையும் ஆற்றும்.உடை எடையையும் (Weight gain)அதிகரிக்கும்.
வாரத்துக்கு இரண்டு முறையாவது தேங்காய்ப்பாலை உணவில் சேர்ப்பது நல்லது.
எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை ஏறுவது இல்லை. இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு சாப்பிட்ட உடனேயே மலம் கழிக்கத் தூண்டும். எங்காவது வெளியில் கிளம்ப ஆயத்தமாகும்போதும், சூடான, காரமான உணவைச் சாப்பிட்டவுடனும் மலம் கழிக்கத் தூண்டும் இந்த கழிச்சல் நோயால், மெலிந்த தேகம் நிரந்தரமாகிவிடும்.
இந்த நோய் இருப்பவர்கள், மருத்துவ சிகிச்சையுடன் சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாதுளை ஆகிய உணவுகளை தினசரி சேர்ப்பது நோயை நீக்கி, உடல் எடையை அதிகரிக்க உதவும்.
எடை அதிகரிக்க அதிகம் உதவுவது, வாழை. அதிலும், நேந்திரம் பழத் துண்டுகளை தேனுடன் சேர்த்து, மாலை வேளைகளில் நொறுக்குத்தீனியாக குழந்தைகளுக்குக் கொடுப்பது எடையை உயர்த்துவதுடன், நோய் எதிர்ப்பாற்றலையும் கூட்டும்.
பசும்பால், பசு வெண்ணெய் இரண்டும் உடல் எடையைக் கூட்ட உதவும்.
மெலிந்து இருப்பது ஃபேஷனாகி வரும் இந்தக் காலத்தில் உள்ளே மறைந்திருக்கும் நோயை மறந்து அல்லது அலட்சியமாகக் கண்டுகொள்ளாமல் இருந்துவிடக் கூடாது. வயதுக்கு ஏற்ற சரியான எடை இல்லையென்றால், அது சாதாரண ஊட்டச்சத்துக் குறைபாடு,சர்க்கரைநோய், புற்றுநோய் வரை எதுவாகவும் இருக்கலாம்.
குடும்ப மருத்துவரை அணுகி, உடல் இளைத்தல், எடை குறைதலுக்கான காரணங்களை அறிந்துகொண்டு, உடனே தீர்க்க வேண்டியது அவசியம்.
இப்போது உடல் எடையை கட்டுக்குள் வைக்க பாரம்பரிய உணவை தவிர்த்து இரண்டு பிரட் துண்டுகளோடு நிறுத்திவிடும் இளையோர் பலர் இருக்கிறார்கள்.
ஆரோக்கியமாக எடை அதிகரிக்க (Weight gain) எடுத்துகொள்ள வேண்டிய உணவுகளை பார்ப்போம்.
இவை ஆரோக்கியமாக உடல் எடையை அதிகரிக்கும் என்பதால் பருமனாகி விடுவோமோ என்ற அச்சம் தேவையில்லை.
ஆரோக்கியமான உடல் எடைக்கு ஏற்ற சிற்றுண்டிகள் (Snacks suitable for healthy body weight)
எள்ளு பலகாரங்கள்
இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது சும்மா எதுகை மோனை பழமொழி அல்ல. உண்மையில் பலன் தரும் பழமொழி. எள்ளு உடல் எடையை அதிகரிக்க செய்யகூடியவை.
எள்ளுசட்னி, எள்ளுப்பாகு, எள்ளு சேர்த்த நொறுக்குத்தீனிகள் போன்றவற்றை அவ்வபோது உணவில் சேர்க்க வேண்டும்.
தினமும் ஒரு எள் உருண்டை சாப்பிடுவதும் பலம் தரும். இதை தயாரிப்பதும் எளிது தான்.
ஒரு கப் எள்ளுக்கு 2 கப் வெல்லம் சேர்க்க வேண்டும். கருப்பு எள்ளாக இருந்தால் நல்லது. கசப்பு இருந்தாலும் பலன் கிடைக்கும்.
எள்ளை வறுத்து பொன்னிறமாக இருக்கும் போது எடுத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்ற வேண்டும். அதனுடன் வெல்லத்தை பொடித்து , இரண்டு ஏலக்காய் சேர்த்து சுற்றி நெய் கலந்து உருண்டையாக பிடிக்க வேண்டும்.
சுவையும் நன்றாக இருக்கும். ஆனால் கடைகளில் விற்கும் எள் உருண்டை வாங்கும் போது பார்த்து வாங்குங்கள். இது சர்க்கரையில் செய்திருக்கலாம் இதனால் முழுமையாக கிடைக்காது.
உளுந்து பலகாரங்கள்
கறுப்பு உளுந்தை வாணலியில் வறுத்து வாசனை போனதும் மிஷினில் கொடுத்து பொடித்துகொள்ள வேண்டும்.
1 கப் உளுந்துக்கு 1 கப் நல்லெண்ணெய், 2 கப் பனங்கருப்பட்டி சேர்த்து களி போல் கிண்ட வேண்டும்.
பனங்கருப்பட்டி பாகு காய்ச்சி சிறிது சிறிதாக உளுந்து மாவை சேர்த்து அவ்வப்போது நல்லெண்ணெய் சேர்த்து கிண்ட வேண்டும். இது ஒட்டாமல் அல்வா பதத்துக்கு வரும் போது இறக்கி உருண்டை பிடிக்க வேண்டும். சுவை மிக நன்றாக இருக்கும்.
பெண்களுக்கு இடுப்புக்கும், கருப்பைக்கும் பலம் தரும் உளுந்து மெலிந்த உடலை கொண்டிருப்பவர்களுக்கும் பருமனை ஏற்படுத்தும். வாளிப்பான உடல் என்று சொல்வதற்கேற்றபடி உடலை மாற்றும்.
பசு நெய்
சுத்தமான பசு நெய்யாக இருப்பது அவசியம். வீட்டில் நெய் காய்ச்சுவதாக இருந்தால் இன்னும் சிறப்பு. பசு நெய், வெண்ணெய், கோவா போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவும்.
தினமும் மதிய உணவின் போது ஒரு பிடி சூடான சாதத்தில் 2 டீஸ்பூன் நெய்விட்டு சிட்டிகை உப்பு போட்டு சாப்பிடலாம்.
பருப்பு கறியின் மேல் சூடான நெய் ஊற்றி ,பருப்பு நெய் சாதமாக சாப்பிடலாம். நெய் ஆரோக்கியமாக எடையை அதிகரிக்க செய்யும்.
கேழ்வரகு பலகாரங்கள்
கேழ்வரகு சத்து தானியம் மட்டுமல்ல உடலை தேற்றும் தானியமும் கூட. கேழ்வரகு அடை, கேழ்வரகு களி, கேழ்வரகு தோசை கேழ்வரகு லட்டு என செய்து சாப்பிடலாம்.
கேழ்வரகு மாவை புட்டு போல் அவித்து தேங்காய் பூ, வெல்லம் சேர்த்து சூடாகஉண்ண சுவையாக இருக்கும்.
பாசிப்பருப்பு லட்டு
பாசிப்பருப்பு அதிக நன்மை தரும் பருப்புகளில் இதுவும் ஒன்று. பாசிப்பயறை இலேசாக வாசனை போக வறுத்து மிஷினில் நைஸாக அரைக்கவும். இதை ஆறுமாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
நாட்டுச்சர்க்கரையை மிக்ஸியில் பொடித்து வைக்கவும். உலர் பழங்கள், உலர் கொட்டைகளை பொடியாக நறுக்கி வைக்கவும். நெய்யை சூடேற்றி பாசிப்பருப்பு மாவில் கலந்து உருண்டைகளாக பிடித்து வைக்கவும். தினம் ஒரு உருண்டையாக எடுத்துகொள்ளலாம்.
பழங்கள்
உணவுக்கு இடையில் எடுத்துகொள்ளும் சிற்றுண்டி வகைகளுக்கு இடையில் எடையை அதிகரிக்க உதவும் பழங்களும் அவசியம் தேவை.
மாலை நேரத்தில் செவ்வாழை பழம், தேனில் நனைத்த நேந்திரம் பழம் கொடுக்கலாம்.
மாதுளையை சாறாக்காமல் ஒரு கப் முத்துக்களை அப்படியே சாப்பிடலாம். தினமும் காலையில் எழுந்ததும் ஒரு பெரிய டம்ளர் நிறைய நீராகாரம் குடிக்கலாம்.
வாரத்துக்கு இரண்டு நாட்கள் தேங்காய்ப்பால் குடிக்கலாம்.
மேற்கண்டவை எல்லாமே சிற்றுண்டிகள் தான். இவை உடலின் குடல் இயக்கங்க குறைபாடுகளை நீக்கி குடல் இயக்கங்களை சீராக்கவும் உதவும் என்பதால் மலச்சிக்கல் நேராது.
இதிலிருக்கும் ஊட்டச்சத்துகளை உடல் முழுவதும் உறிஞ்சும் வகையில் இருப்பதால் உடல் எடை அதிகரிப்பும் ஆரோக்கியமாக இருக்கும்.
பாரம்பரிய உணவுகளான இவை உடலுக்கு பலம் கொடுப்பதிலும் வல்லவை. சாப்பிடும் போது நீங்களே உணர்வீர்கள்.